திராங்கானு-கிளந்தான் கடற்பகுதியில் உள்ள செப்பாட் எண்ணெய் வயல் மேடையில் நேற்று மதியம் நிகழ்ந்த விபத்தில், மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

25 மே 2026, 2:45 AM
திராங்கானு-கிளந்தான் கடற்பகுதியில் உள்ள செப்பாட் எண்ணெய் வயல் மேடையில் நேற்று மதியம் நிகழ்ந்த விபத்தில், மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

திராங்கானு-கிளந்தான் கடற்பகுதியில் உள்ள செப்பாட் எண்ணெய் வயல் மேடையில் நேற்று மதியம் நிகழ்ந்த விபத்தில், மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவத்தை காவல்துறை உறுதி செய்துள்ளது.

கோலா திராங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் நூர் வெளியிட்ட அறிக்கையில், மலாக்கா, பத்து பிரண்டாமைச் சேர்ந்த அஹ்மத் ஃபிக்ரி ஜக்காரியா (38), பகாங், குவாந்தானைச் சேர்ந்த முஹம்மது ஃபேசுவான் ஹக்கிம் முகமட் புஸ்டமாம் (28), மற்றும் பகாங், பண்டார் இந்திரா மக்கோத்தாவைச் சேர்ந்த நிக் முஹம்மது ஹஃபிஃபி அஸ்ரி அப் மஜித் (38) ஆகியோர் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிலாங்கூர், பந்திங்கைச் சேர்ந்த முகமட் தௌஃபிக் முகமட் ருஸ்லான் (37) படுகாயமடைந்து கோலா திராங்கானு சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையில் (HSNZ) சிகிச்சை பெற்று வருகிறார்.

"நேற்று மதியம் சுமார் 12.50 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நால்வரும் மேடையின் கீழ்ப்பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, மேடையில் இருந்த ஒரு மீட்புப் படகில் கடலுக்குள் இறங்க முயன்றுள்ளனர். அவர்கள் அனைவரும் மேடையின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் ஆவர்," என்று அவர் கூறினார்.

"எனினும், படகில் பொருத்தப்பட்டிருந்த கயிறு அல்லது கொக்கி கழன்றதால், படகுடன் சேர்ந்து நால்வரும் கடலுக்குள் விழுந்ததாக நம்பப்படுகிறது," என்று அஸ்லி தெரிவித்தார்.

மீட்புக் குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு அனைவரையும் மீண்டும் மேடைக்குக் கொண்டு வந்தனர். பின்னர், பிற்பகல் 4 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் சுல்தான் மஹ்மூட் விமான நிலையத்திற்கு (LTSM) கொண்டு செல்லப்பட்டனர்.

மாலை 5 மணியளவில் விமான நிலையத்தை அடைந்ததும், அனைவரும் உடனடியாக சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

"மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோதே மூவர் உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது. காயமடைந்த மற்றொருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது," என்று அவர் கூறினார்.

உயிரிழந்த மூவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையின் தடயவியல் துறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த வழக்கு தற்போதைக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 மணிக்கு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அஸ்லி மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.