ஷா ஆலம், மே 24: சிலாங்கூர், பினாங்கு, பேராக் உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களில் இன்று நண்பகல் 12 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வானிலையால் சிலாங்கூர் மாநிலத்தில் சபாக் பெர்ண்ம் பகுதி பாதிக்கப்படலாம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெர்லிஸ் மாநிலம் முழுமைக்கும், கெடா மாநிலத்தில் லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பொக்கோக் செனா, பாடாங் தெரப், யான், பெண்டாங் மற்றும் கோலா மூடா ஆகிய இடங்களுக்கும், பினாங்கு மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேராக் மாநிலத்தில் கிரியான், லாருட், மாதாங் மற்றும் செலாமா, மாஞ்சோங், மத்திய பேராக், பாகான் டத்தோ மற்றும் ஹிலிர் பேராக் ஆகிய மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சரவாக்கில் பெத்தோங், சரிக்கே (சரிக்கே மற்றும் மெராடோங்), முக்கா (தஞ்சோங் மானிஸ் மற்றும் தாரோ) மற்றும் மிரி ஆகிய இடங்களிலும், சபாவில் கூடாட் பகுதியிலும் இந்த மோசமான வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் விதிமுறைகளின்படி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கக்கூடிய, மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் தென்படும் போது மட்டுமே இத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்படும்.
மேலும், இந்த இடியுடன் கூடிய மழை எச்சரிக்கையானது ஒரு குறுகிய கால அறிவிப்பாகும் என்றும், இது வெளியிடப்பட்டதில் இருந்து அதிகபட்சமாக ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் விளக்கியுள்ளது.








