பராமரிப்பாளர் வீட்டில் ஏழு மாதக் குழந்தை உயிரிழப்பு

20 மே 2026, 8:56 AM
பராமரிப்பாளர் வீட்டில் ஏழு மாதக் குழந்தை உயிரிழப்பு

ஷா ஆலம், மே 20: கடந்த செவ்வாய்க்கிழமை சிரம்பான், பண்டார் ஸ்ரீ செண்டாயானில் உள்ள குழந்தை பராமரிப்பாளர் வீட்டில், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஏழு மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.

குழந்தை சுயநினைவின்றி இருப்பதாகப் பராமரிப்பாளர் தெரிவித்ததை அடுத்து, குழந்தையின் பெற்றோர் இரவு 10 மணியளவில் புகார் அளித்ததாக சிரம்பான் மாவட்டக் காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் அசார் அப்துல் ரஹீம் கூறினார்.

இதையடுத்து, குழந்தை பண்டார் ஸ்ரீ செண்டாயானுக்கு அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் துவாங்கு ஜஃபார் மருத்துவமனைக்கு (HTJ) மாற்றப்பட்டது.

"தனது ஏழு மாத ஆண் குழந்தை சுயநினைவின்றி இருப்பதாக பராமரிப்பாளரிடமிருந்து அழைப்பு வந்ததாகப் புகார்தாரர் தெரிவித்தார்," என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

துவாங்கு ஜஃபார் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர், குழந்தைக்கு அவசர சுவாச உதவி (CPR) அளிக்க முயன்றதாக அவர் கூறினார்.
இருப்பினும், மீட்பு முயற்சிகள் தோல்வியடைந்ததால், குழந்தை இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.

கடந்த 2025 டிசம்பர் மாதம் முதல் அந்தப் பராமரிப்பாளரால் குழந்தை பராமரிக்கப்பட்டு வந்தது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அசார் கூறினார்.

"சம்பவத்தின் போது, பராமரிப்பாளர் குழந்தையின் வாயில் சிலிக்கான் வகை சூப்பானை வைத்து தொட்டிலில் தூங்க வைத்ததாக நம்பப்படுகிறது," என்றார்.

குழந்தையின் உடல், இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய ரெம்பாவ் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவப் பிரிவுக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உதவுவதற்காகப் பராமரிப்பாளர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு குழந்தைகள் சட்டம் 2001-இன் பிரிவு 31(1)(a) இன் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.