உலகக் கிண்ண செபாக் தக்ராவ் போட்டி 2026: பிலிப்பைன்ஸை வீழ்த்தி மலேசியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது

19 மே 2026, 7:07 AM
உலகக் கிண்ண செபாக் தக்ராவ் போட்டி 2026: பிலிப்பைன்ஸை வீழ்த்தி மலேசியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது

கோலாலம்பூர், மே 19: தித்திவங்சா அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற உலகக் கிண்ண செபாக் தக்ராவ் (Sepak Takraw) போட்டியின் விறுவிறுப்பான காலிறுதி ஆட்டத்தில், பிலிப்பைன்ஸ் அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி மலேசிய தேசிய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்த அசத்தலான வெற்றியின் மூலம், தலைமைப் பயிற்சியாளர் அகமட் ஜெய்ஸ் பஹாருன் வழிநடத்தும் மலேசிய அணி, மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்த மியான்மர் அணியை அரையிறுதியில் எதிர்கொள்ளவுள்ளது.

மலேசிய அணியின் முன்னணி வீரர்களான முகமது சியாஹிர் முகமது ரோஸ்டி (டெக்கோங்), ஃபர்ஹான் ஆடம் (செட்டர்) மற்றும் முகமட் அஸ்லான் அலியாஸ் (ஸ்டிரைக்கர்) ஆகியோர் அடங்கிய கூட்டணி, ஆரம்பம் முதலே தங்களின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 'குரூப் ஏ' பிரிவின் சாம்பியன்களாக வலம் வரும் மலேசிய அணி, அதே வெற்றி வேகத்துடன் ஆட்டத்தின் முதல் செட்டை 15-9 என்ற புள்ளி கணக்கில் மிக எளிதாகக் கைப்பற்றி முன்னிலை பெற்றது.

முதல் செட்டின் வெற்றி பெற்று அசாத்திய தன்னம்பிக்கையோடு களம் புகுந்த மலேசிய வீரர்கள், இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தினர். பிலிப்பைன்ஸ் அணியின் ரான்சிட்டெட் கபாயெரோன், கிளிண்டல் போரி மற்றும் வின்ஸ் அலிசன் டோர்னோ ஆகியோரின் கடுமையான போராட்டத்தையும் மீறி, 15-5 என்ற புள்ளிக் கணக்கில் மலேசியா இரண்டாவது செட்டையும் மிக எளிதாகத் தன்வசப்படுத்தியது.

இந்த அமோக வெற்றி குறித்துப் பேசிய பயிற்சியாளர் அகமட் ஜெய்ஸ், ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக அணியின் சில ஆட்ட நுணுக்கங்களை, குறிப்பாக சர்வீஸ் (Service) செய்வதில் உள்ள சீரான தன்மையை இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது என்பதை ஒப்புக்கொண்டார்.

நேற்றைய ஆட்டத்தின் போது பந்தை வீசுவதிலும், சர்வீஸ் செய்யும் நேரத்திலும் இன்னும் சில திருத்தங்களைச் செய்ய வேண்டியுள்ளது என்றும், அப்போதுதான் ஆட்டத்தின் வேகத்தை அதிகரிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இதன் மூலம், அடுத்த முக்கிய போட்டியில் தேவையற்ற தவறுகளைக் குறைத்துக் கொள்ள முடியும் என அவர் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டினார்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.