ஷா ஆலம், மே 15 – சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரித்துள்ளது.
இந்தத் திடீர் வானிலை மாற்றம் காரணமாகப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களின் பயணங்களின் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதேபோன்ற மோசமான வானிலை நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலங்கள் முழுவதும் நீடிக்கும் என்றும், அதுமட்டுமன்றி பேராக், திராங்கானு, பகாங், ஜோகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களின் சில குறிப்பிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் நடைமுறைப்படி, ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான தீவிரத்துடன் பெய்யும் மழை, தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் போது மட்டுமே இத்தகைய இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இந்த எச்சரிக்கையானது அதிகபட்சமாக ஆறு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் ஒரு குறுகிய கால எச்சரிக்கை அறிவிப்பாகும்.
எனவே, பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை குறித்த மிகவும் துல்லியமான மற்றும் அண்மைக்காலத் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளப் பொதுமக்கள் www.met.gov.my என்ற மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது அவர்களின் சமூக ஊடகப் பக்கங்களைப் பின்தொடரலாம்.
அதுமட்டுமன்றி பொதுமக்கள் தங்களின் கைப்பேசிகளில் 'myCuaca' செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.







