கோலாலம்பூர், மே 15 – நாட்டின் ஆறு மாநிலங்களில் இன்று நண்பகல் வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று காலை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையின்படி, தீபகற்ப மலேசியாவின் வடபகுதியில் பெர்லிஸ், பினாங்கு மற்றும் கெடாவின் லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், போக்கோக் செனா, யான், பெண்டாங் மற்றும் கோலா மூடா ஆகிய மாவட்டங்களில் மோசமான வானிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில், கோலா சிலாங்கூர் மற்றும் கிள்ளான் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும். தென்பகுதியில் ஜோகூர் மாநிலத்தின் பத்து பகாட், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய மாவட்டங்களில் இதே போன்ற சூழல் நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் சிபு, முக்கா, பிந்துலுவின் தாதாவ் மற்றும் பிந்துலு பகுதிகள், மிரியின் சுபிஸ் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பொதுமக்களும் இந்த மோசமான வானிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.







