ஷா ஆலம், மே 13 - கிள்ளான், ஜாலான் காப்பார், பத்து 5 பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தின் தாக்கத்தால் அவர் சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்டு, அருகில் இருந்த இரண்டு மீட்டர் ஆழமான கால்வாயில் விழுந்ததாக நம்பப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து இன்று அதிகாலை 3.23 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப் படை பிரிவின் செயல்பாட்டுத் துறை உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, காப்பார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு தீயணைப்பு வாகனம் மற்றும் ஏழு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர்.
கால்வாய்க்குள் விழுந்து கிடந்த அந்த நபரை மீட்புப் படையினர் ஸ்ட்ரெச்சர் (Stretcher) உதவியுடன் மேலே கொண்டு வந்தனர்.
இருப்பினும், சம்பவ இடத்திற்கு விரைந்த சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவினர், அந்த நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். இந்த விபத்து தொடர்பான மேல் விசாரணைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.








