ஷா ஆலம், மே 12: மலேசியாவின் சிலாங்கூர் உட்பட ஒன்பது மாநிலங்களில் இன்று பிற்பகல் 3 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர் மற்றும் கிள்ளான் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களான கெடாவில் லங்காவி, சிக் மற்றும் பாலிங் ஆகிய இடங்களிலும், பினாங்கு தீவின் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளிலும் இதே போன்ற வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராக் மாநிலத்தில் லாருட், மாடாங், செலாமா, உலு பேராக், கோலா கங்சார், மஞ்சோங், கிந்தா, பேராக் தெங்கா, கம்பார், பாகான் டத்தோ, ஹிலீர் பேராக் மற்றும் பாடாங் காஜா ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், கிளந்தானில் ஜேலி, பகாங்கில் கேமரன் மலை, ஜோகூரில் கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய மாவட்டங்களும் இந்த வானிலை எச்சரிக்கையில் உட்படுத்தப்பட்டுள்ளன.
கிழக்கு மலேசியாவைப் பொறுத்தவரை, சரவாக்கின் மிரி பகுதியிலும், சபாவின் உட்பகுதி (நபாவான்), மேற்கு கடற்கரை (கோத்தா கினபாலு மற்றும் துவாரான்) மற்றும் தாவாவ் (குனாக் மற்றும் செம்பூர்ணா) ஆகிய இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக ஒரு மணிநேரத்தில் 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் போது அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் போது இத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.
பொதுமக்கள் அதிகாரப்பூர்வமான மற்றும் துல்லியமான வானிலை தகவல்களைப் பெற மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.met.gov.my ஐப் பார்க்கவும், அவர்களது சமூக ஊடகப் பக்கங்களைப் பின்தொடரவும் அல்லது 'myCuaca' செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.







