குவாந்தான், மே 6: பகாங் மாநிலத்திற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சிங்கப்பூர் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று பகாங் மாநில அரசுக்கு மரியாதை நிமித்தமான வருகை மேற்கொண்டனர்.
இந்தச் சந்திப்பு குறித்துப் பகாங் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தனது முகநூல் பதிவில் குறிப்பிடுகையில், முதலீடு, பொருளாதார மேம்பாடு, சுற்றுலா, கல்வி மற்றும் அதிக தாக்கம் கொண்ட இதர துறைகளில் பகாங் மற்றும் சிங்கப்பூர் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தச் சந்திப்பு ஒரு சிறந்த தளமாக அமைந்ததாகத் தெரிவித்தார்.
"தற்போது நிலவும் சுமூகமான உறவு இருதரப்பு செழிப்புக்காகத் தொடர்ந்து வளரும் என்றும், இது மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலும் மாநில மேம்பாட்டிற்கு ஆதரவாகவும் பல புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடும் என்றும் மாநில அரசு நம்புகிறது," என்று அவர் கூறினார்.
இந்தச் சந்திப்பின் போது, சிங்கப்பூர் வெளியுறவு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் ராஜாங்க அமைச்சர் சுல்கர்னைன் அப்துல் ரஹீம், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா, மலேசியாவிற்கான சிங்கப்பூர் தூதர் வனு கோபால மேனன் மற்றும் முக்கிய அதிகாரிகள் லீ சியன் லூங்குடன் உடனிருந்தனர்.
அவர்களைப் பகாங் மாநில பொதுப்பணி, போக்குவரத்து மற்றும் சுகாதாரக் குழுத் தலைவர் டத்தோ ரசாலி காசிம், முதலீடு, தொழில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் குழுத் தலைவர் டத்தோ முகமட் நிஜார் முகமட் நஜிப் மற்றும் மாநிலச் செயலாளர் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அபு பக்கர் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.
மூத்த அமைச்சர் லீ சியன் லூங், பகாங் மற்றும் திரங்கானு மாநிலங்களுக்கான ஐந்து நாள் அதிகாரப்பூர்வப் பயணத்தை நேற்று தொடங்கி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (மே 8) வரை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








