ஷா ஆலம், மே 5: சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா உள்ளிட்ட தீபகற்ப மலேசியாவின் பல மாநிலங்களிலும், சபா மற்றும் சரவாக் பகுதிகளிலும் இன்று மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மோசமான வானிலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தீபகற்பத்தின் வடபகுதியில் பெர்லிஸ், பினாங்கு மற்றும் கெடாவின் குபாங் பாசு, பாடாங் தெராப், சிக், பாலிங், கூலிம், பண்டார் பாரு ஆகிய மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
பேராக்கில் கிரியான், லாருட், மாடாங் மற்றும் செலாமா, உலு பேராக், கோலா கங்சார், கிந்தா, காம்பார், பாதாங் பாடாங் மற்றும் முவாலிம் ஆகிய இடங்கள் இந்த எச்சரிக்கை வளையத்திற்குள் வருகின்றன. கிழக்குக் கடற்கரைப் பகுதியில் கிளந்தானின் கோலா கிராய் மற்றும் பகாங்கின் ஜெராண்டுட் ஆகிய இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தெற்குப் பகுதியில் நெகிரி செம்பிலானின் சிரம்பான், போர்டிக்சன், ரெம்பாவ் ஆகிய மாவட்டங்களிலும், ஜோகூரில் செகாமட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய இடங்களிலும் மோசமான வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மலேசியாவைப் பொறுத்தவரை, சரவாக்கின் மிரி (சுபிஸ்) பகுதியிலும், சபாவின் பெடாலாமான், மேற்கு கடற்கரை, தாவாவ், சண்டாக்கான் மற்றும் கூடாட் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும்.
வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் போதும், அந்த நிலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் போதும் இத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.
இந்த வானிலை எச்சரிக்கையானது குறுகிய காலத் தன்மை கொண்டது என்பதால், ஒவ்வொரு முறை வெளியிடப்படும் போதும் அதன் ஆயுட்காலம் ஆறு மணி நேரத்திற்கு மிகாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.







