எரிபொருள் மானியம் செலவுகளைச் சமாளிக்கப் போதுமானதாக இல்லை - விவசாயச் சந்தை வியாபாரிகள்

4 மே 2026, 5:25 AM
எரிபொருள் மானியம் செலவுகளைச் சமாளிக்கப் போதுமானதாக இல்லை - விவசாயச் சந்தை வியாபாரிகள்

ஷா ஆலம், மே 4: விவசாயச் சந்தைகளில் உள்ள சிறு வியாபாரிகள், தற்போதைய எரிபொருள் மானியம் தங்களின் தினசரி செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்க ஓரளவிற்கு உதவினாலும், அதிகரித்து வரும் பெட்ரோல் விலை மற்றும் விநியோகப் பொருட்களின் விலை உயர்வு அழுத்தத்தைச் சமாளிக்க அது போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறி வியாபாரம் செய்து வரும் முகமட்
முக்லாஷ் நசிரின் (38), எரிபொருள் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதால் தனது வணிகம் தற்போது பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது என்றார்.

"பெட்ரோல் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதால் இப்போது நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. விற்பனை விலையை அதிகமாக உயர்த்தினால், வாடிக்கையாளர்கள் வேறு இடத்திற்குச் சென்றுவிடுவார்கள். அதோடு, காய்கறிகள் விற்காவிட்டால் விரைவில் அழுகிவிடும்," என்று அவர் கூறினார்.

"தற்போதைக்கு இந்த மானியம் உண்மையில் உதவுகிறது, ஆனால் ஒரு நாள் மானியம் நிறுத்தப்பட்டு விடுமோ என்ற கவலையும் உள்ளது" என்று அவர் இங்குள்ள செக்ஷன் 13 விவசாயச் சந்தையில் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில், மீன் வியாபாரியான முகமது ஹைருல் அனுவார் முக்லாஸ்
(42), இதே கருத்தைப் பகிர்ந்துகொண்டார். விநியோகப் பொருட்களைப் பெற நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால், எரிபொருள் செலவு ஒரு முக்கியச் சுமையாக இருப்பதாக அவர் கூறினார்.

"நான் பேராக், சுங்கை பெசார் மற்றும் சிகிஞ்சானில் இருந்து மீன்களைப் பெறுகிறேன். பெட்ரோல் பயன்பாடு மிகவும் அதிகம். இப்போது மானியத்துடன் ஒரு முழு டேங்க் நிரப்ப கிட்டத்தட்ட RM400 ஆகிறது. மானியம் நிறுத்தப்பட்டால் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும்," என்றார்.

"விநியோகப் பொருட்களைப் பெறுவதில் சிக்கல் இல்லை, ஆனால் விநியோகிப்பாளரிடமிருந்து வரும் விலை சில நேரங்களில் சற்று அதிகரிக்கிறது. அதனால் நாங்களும் விற்பனை விலையைச் சிறிதளவு உயர்த்த வேண்டியுள்ளது" என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரம் செய்து வரும் அவர் கூறினார்.

பழ வியாபாரியான முஹம்மது முஸ்தகிம் ஃபிர்தௌஸ்
(26), கூறுகையில், பெட்ரோல் விலை உயர்வு, குறிப்பாக எளிதில் அழுகக்கூடிய பொருட்களை விற்கும் போது, இலாபத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

"மானியம் போதுமானதாக இல்லை, ஒரு மாதம் முடிவதற்குள் தீர்ந்துவிடுகிறது. சில சமயங்களில், பழங்கள் அழுகும் நிலையில் இருக்கும்போது நஷ்டத்திற்கு விற்க வேண்டியுள்ளது. பொருளை விற்றுத் தீர்த்தால் போதும் என்ற மனநிலையில் கண்ணை மூடிக்கொண்டு விற்கிறோம்," என்றார்.

"தினமும் வெளியே சென்று வியாபாரம் செய்யும் எங்களைப் போன்ற வியாபாரிகளுக்கு உதவ, அரசாங்கம் மானியத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும்" என்று கூறிய அவர், செலவுகளைச் சமாளிக்க ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்காமல், பழங்களின் விலையைச் சற்று உயர்த்தியதாகக் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.