வறுமை ஒழிப்புத் திட்டங்களால் சிலாங்கூர் மக்களின் மகிழ்ச்சி குறியீடு உயர்வு: மந்திரி புசார்

29 ஏப்ரல் 2026, 9:25 AM
வறுமை ஒழிப்புத் திட்டங்களால் சிலாங்கூர் மக்களின் மகிழ்ச்சி குறியீடு உயர்வு: மந்திரி புசார்

ஷா ஆலம், ஏப்ரல் 29: சிலாங்கூர் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள், மாநிலத்தின் மகிழ்ச்சிக் குறியீட்டை அதிகரிப்பதற்கும், மக்களின் நலனை வலுப்படுத்துவதற்கும் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

சராசரி வறுமை விகிதம் குறைவது மக்களின் வாழ்க்கைத் தரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், இதுவே சமூகத்தின் மகிழ்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது என்றும் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில், சிலாங்கூரில் சராசரி வறுமை விகிதம் 13-14 விழுக்காட்டிலிருந்து எட்டு முதல் ஒன்பது விழுக்காடு என்ற ஒற்றை இலக்கத்திற்குக் குறைக்கப்பட்டுள்ளது
என அவர் குறிப்பிட்டார்.

“வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். அதனுடன், 'பிங்காஸ்' (Bantuan Kehidupan Sejahtera Selangor) போன்ற ஆதரவுத் திட்டங்களும் உள்ளன. ஏழை மக்களின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக இந்த ஆண்டு அத்திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

"நடுத்தர காலத் திட்டமாக, மக்களின் நல்வாழ்வின் முக்கிய அங்கமான வீட்டுவசதி மேம்பாட்டை மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது. மொத்தம் 174,000 வீட்டு
யூனிட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சுமார் 40,000 யூனிட்டுகள் மாநில அரசின் துணை நிறுவனங்கள் மூலம் கட்டப்பட்டு வருகின்றன அல்லது செயல்படுத்தப்படவுள்ளன.

இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில், சிலாங்கூர் மகிழ்ச்சிக் குறியீட்டை உயர்த்துவதற்கான மாநில அரசின் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் குறித்து சுங்கை ரமால் சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அதே நேரத்தில், வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் (KPKT) மலேசியாவின் 20 மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியலில் அம்பாங், பெட்டாலிங் ஜெயா மற்றும் கிள்ளான் உள்ளிட்ட சிலாங்கூரில் உள்ள பல நகரங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் அமிருடின் தெரிவித்தார்.

“நீண்டகாலத் திட்டத்தைப் பொறுத்தவரை, முதல் சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) கீழ், வாழத் தகுந்த மாநிலம் என்ற கருத்தின் அடிப்படையில் மாநில வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

"நாங்கள் RS-1 திட்டத்தை முன்வைக்கும்போது, செழிப்பு மற்றும் உயர் வருமானம் பற்றி மட்டும் பேசவில்லை, வாழத் தகுந்த தன்மையையும் பேசுகிறோம். அந்த வாழத் தகுந்த தன்மைதான் இந்த மாநில மக்களின் மகிழ்ச்சிக்கான உண்மையான பிரதிபலிப்பாகும்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.