முறையான நில ஆவணங்கள் இல்லாத ஆலயங்களின் நிதி உதவி விண்ணப்பங்கள் நிராகரிப்பு

28 ஏப்ரல் 2026, 9:59 AM
முறையான நில ஆவணங்கள் இல்லாத ஆலயங்களின் நிதி உதவி விண்ணப்பங்கள் நிராகரிப்பு

ஷா ஆலம், ஏப்ரல் 28: முறையான நில உரிமை ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதால், முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான பல உதவி விண்ணப்பங்களை மாநில அரசு நிராகரித்துள்ளது.

அரசாங்க நிலத்தில் சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டிருப்பதால், அந்த விண்ணப்பங்களைக் கருத்தில் கொள்ள முடியவில்லை என்று புத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோ சமயங்களுக்கான சிறப்பு செயற்குழுவின் (லீமாஸ்) இணைத் தலைவர் வீ.பாப்பாராய்டு கூறினார்.

"வழிபாட்டுத் தலங்களின் செயல்திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சங்கங்கள் அல்லது அமைப்புகளை மாநில அரசு எப்போதும் ஆதரிக்கிறது."

"இருப்பினும், மேம்பாடு அல்லது உள்கட்டமைப்பு உதவிகளுக்கு, சொந்த நிலத்தில் இயங்கும் வழிபாட்டுத் தலங்களுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். அரசாங்க நிலத்தில் கட்டப்பட்ட அல்லது உரிமை ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்களை நிராகரிக்கவோ அல்லது ஒத்திவைக்கவோ வேண்டியுள்ளது," என்று அவர் கூறினார்.

இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி. குணராஜ் எழுப்பிய துணைக் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

முன்னதாக, கடந்த ஆண்டு 669 வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்துவதற்காக மொத்தம் 60 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டதாகப்
பாப்பாராய்டு தெரிவித்தார். இதில், சீனக் கோயில்களுக்கு 37 லட்சம் வெள்ளியும், இந்து ஆலயங்களுக்கு 16.5 லட்சம் வெள்ளியும், தேவாலயங்களுக்கு 541,650 வெள்ளியும், குருத்வாராக்களுக்கு 78,200 வெள்ளியும் வழங்கப்பட்டன.

"பழுதுபார்ப்பு அல்லது உள்கட்டமைப்பு மேம்பாடுகள் தேவைப்படும் வழிபாட்டுத் தலங்கள், லீமாஸ் நிதி உதவி அமைப்பு (Sistem Bantuan Kewangan LIMAS) மூலம் மாநில அரசிடம் நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்."

"அனைத்து விண்ணப்பங்களும் நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டவை. இதன் மூலம், இந்த வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பாகவும், ஒழுங்காகவும் இருப்பதோடு, உள்ளூர் சமூகத்திற்குப் பயனளிப்பதையும் உறுதி செய்ய முடியும்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.