ஷா ஆலம், ஏப்ரல் 21: சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் ஆலோசனையை தொடர்ந்து, சிலாங்கூர் சுக்மா 2026 போட்டிகள் ஒத்திவைக்கப் பட்டால் சரவாக் மாநிலம் அதற்கு இணக்கம் தெரிவிக்கும்.
சரவாக் இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா, இந்த ஆலோசனை போட்டிகளை ஒத்திவைப்பதாகுமே தவிர, ரத்து செய்வதாகாது என்றார். தற்போதைய உலகளாவிய நிச்சயமற்ற சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப் படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
உத்துசான் போர்னியோவின் அறிக்கையின்படி, இது தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவை சிலாங்கூர் அரசிடமிருந்து தங்கள் தரப்பு இன்னும் பெறவில்லை என்று அவர் தெரிவித்தார்.
"ஊடக அறிக்கைகள் மூலமாகவே நாங்கள் இது பற்றி அறிந்தோம். சுக்மாவை ஒத்திவைக்க சிலாங்கூர் முடிவு செய்தால், நாங்கள் அதற்கு இணங்குவோம்," என்றார்.
இந்த விளையாட்டுப் போட்டிகளுக்காக நிதி ஒதுக்கீடு, விளையாட்டு வீரர்களுக்கான தயாரிப்புகள் மற்றும் தங்குமிடங்களைத் தேர்வு செய்வது உட்பட, சரவாக் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்று அவர் கூறினார்.
தடகளக் குழுவினர் தங்குவதற்கு ஏற்ற இடங்களை உறுதி செய்வதற்காக சிலாங்கூரில் உள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு பயணம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுக்மா ஒத்திவைக்கப் பட்டால் ஏமாற்றம் அடைவோம் என்பதை ஒப்புக் கொண்டாலும், உலகளாவிய தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு சிறந்த முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று அப்துல் கரீம் வலியுறுத்தினார்.
"இறுதி முடிவை மத்திய அரசு, சிலாங்கூர் அரசு மற்றும் இளைஞர், விளையாட்டு அமைச்சகத்திடம் ஒப்படைக்கிறோம்," என்றார்.
முன்னதாக, மத்திய கிழக்கு நெருக்கடி தீரும் வரையிலும், புதிய ஷா ஆலாம் விளையாட்டரங்க வளாகம் (KSSA) தயாராகும் வரையிலும் சுக்மா 2026 போட்டிகளை ஒத்திவைக்குமாறு சிலாங்கூர் சுல்தான் பரிந்துரைத்திருந்தார்.
தற்போதைய பொருளாதாரச் சூழலில், இந்த மாபெரும் விளையாட்டுப் போட்டிக்கு மிக அதிக நிதி ஒதுக்கீடு தேவைப்படும் என்பதே இதற்குக் காரணம் என்று மாட்சிமை தங்கிய அவர் குறிப்பிட்டிருந்தார்.
நேற்று, டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, சுக்மா 2026 போட்டிகள் ஒத்திவைக்கப் படுமா என்ற முடிவு சுக்மா உயர்மட்டக் குழுவால் தீர்மானிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
22-வது சுக்மா போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறவிருந்தது. பாரா சுக்மா செப்டம்பர் 5 முதல் 10 வரை திட்டமிடப்பட்டிருந்தது.
மொத்தம் 37 விளையாட்டு வகைகளில் 474 நிகழ்வுகள் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 52 போட்டி அரங்குகளில் நடைபெற இருந்தன. அதே நேரத்தில், பாரா சுக்மா 10 விளையாட்டு வகைகளில் 316 நிகழ்வுகளை உள்ளடக்கிய பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
சுக்மா 2026 ஒத்திவைக்கப்பட்டால் அதற்குச் சரவாக் இணக்கம்: சிலாங்கூரின் முடிவுக்காக எதிர்பார்ப்பு
21 ஏப்ரல் 2026, 10:16 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
sukankini
2026 சுக்மா தொடக்க விழா; ஷா ஆலாம் டத்தாரான் மெர்டேகாவில் நடைபெறும்
Shalini Rajamogun
21 ஜூலை 2026

national
சுக்மா 2026: சிலாங்கூர் விளையாட்டு வீரர்களின் இறுதிப் பட்டியல் ஜூலை 25-ஆம் தேதி அறிவிக்கப்படும்
Shalini Rajamogun
13 ஜூலை 2026

selangor
சுக்மா 2026: ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்
Shalini Rajamogun, Adam Azman
26 ஜூன் 2026

national
சிலாங்கூர் சுக்மா 2026இல் புரூணை அணி பங்கேற்பது உறுதி
Shalini Rajamogun
18 ஜூன் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



