ஷா ஆலாம், ஜூலை 21 — 2026ஆம் ஆண்டிற்கான சுக்மா விளையாட்டின் தொடக்க விழா ஷா ஆலாம் டத்தாரான் கெமெர்டேகான் ( Dataran kemerdekaan) திடலில் நடைபெறும் என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமீருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
செயலகக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
"விளையாட்டுக் குழுக்களை ஒன்றிணைத்து, அதேவேளையில் மிதமான முறையில் தொடக்க விழாவை நடத்த இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிறைவு விழாவும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்பவும் செலவுகளை மிச்சப்படுத்தும் வகையிலும் மிகவும் மிதமான முறையிலேயே நடத்தப்படும்.
இருப்பினும், போட்டிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் விறுவிறுப்புக்குக் குறைவிருக்காது என நான் நம்புகிறேன். மாநில மக்கள் அனைவரும் மைதானங்களுக்கு நேரில் சென்று போட்டிகளைக் கண்டு களித்து தங்களின் ஆதரவை வழங்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
இம்முறை சுக்மா போட்டிகள் ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறவுள்ளன. இதில் 37 விளையாட்டுப் பிரிவுகளில் 469 போட்டிகள் நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா சுக்மா' போட்டிகள் செப்டம்பர் 5 முதல் 14 வரை நடைபெறவுள்ளதோடு, அதில் 10 விளையாட்டுப் பிரிவுகளில் 316 போட்டிகள் இடம்பெறும்.






