கோலாலம்பூர், ஏப்ரல் 21: மத்திய கிழக்கு நெருக்கடியின் தாக்கத்தை எதிர்கொள்ளும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு (PMKS) உதவுவதற்காக, வணிக நிதியுதவி உத்தரவாத நிறுவனத்தின் (SJPP) கீழ் கூடுதலாக 5 பில்லியன் ரிங்கிட் வசதியை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலம், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மொத்தத் தொகை 10 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.
நிதி அமைச்சருமான அன்வார், பேங்க் நெகாரா மலேசியாவின் (BNM) ஆளுநர் இந்த கூடுதல் வசதி குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவார் என்று கூறினார்.
"இந்த வசதி, வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், தேவைப்படும் நிறுவனங்களுக்கு ஒரு ஊக்கியாக இருப்பதற்கும் உதவும்," என அவர் குறிப்பிட்டார்.
"இந்த உதவியானது சிறிய நிறுவனங்கள், விவசாயத் துறை, சிறு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறிய உணவகங்கள் மற்றும் கடைகளை நடத்தும் சிறு வியாபாரிகளை கண்டிப்பாகச் சென்றடைய வேண்டும்," என்று இன்று இங்கு 20 நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற வட்டமேசை சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
இந்தச் சந்திப்பில் பேங்க் நெகாரா ஆளுநர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரஷீத் கஃபூர் மற்றும் கருவூலத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ ஜோஹான் மஹ்மூத் மெரிக்கன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் மத்திய கிழக்கு மோதலால் பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தரத் தொழில்களின் நிதி அழுத்தத்தைக் குறைப்பதற்காக, SJPP-யின் கீழ் 5 பில்லியன் ரிங்கிட் உத்தரவாத ஒதுக்கீட்டை நேற்று அன்வார் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுமானம், விவசாயம் மற்றும் வேளாண்-உணவு, தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பாதிக்கப்பட்ட PMKS-களுக்கு ஆதரவளிக்கும் வகையில், நிதியுதவிப் பாதுகாப்பு முந்தைய 70 விழுக்காட்டிலிருந்து 80 விழுக் காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரவாதக் காலம் ஏழு ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
2023 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் 50,000-க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு 50 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி உத்தரவாதங்கள் மூலம் உதவியுள்ள SJPP திட்டம், PMKS-களின் நீடித்த தன்மையை ஆதரிப்பதில் அரசாங்கத்தின் முக்கிய கருவிகளில் ஒன்றாகத் தொடர்கிறது.
முன்னதாக, 1 மில்லியன் முதல் 5 மில்லியன் ரிங்கிட் வரை ஆண்டு விற்பனை கொண்ட வணிகங்களுக்காக, மின்னியல் விலைப்பட்டியல் (e-Invois) நான்காம் கட்ட அமலாக்கத்திற்கு டிசம்பர் 31, 2027 வரை 12 மாதங்கள் கூடுதல் அவகாசம் வழங்கி அரசாங்கம் அதன் அமலாக்கத்தை இலகுவாக்கியுள்ளது.
மேலும், மோதல் காரணமாக ஏற்றுமதி செயல்முறையை முடிக்க முடியாத மலேசியத் தயாரிப்புப் பொருட்களை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு, இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை இறக்குமதி வரி மற்றும் விற்பனை வரியிலிருந்து தற்காலிக விலக்கு அளிக்கவும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
உலகளாவிய நெருக்கடியை எதிர்கொள்ள சிறு நிறுவனங்களுக்கு உதவ அரசாங்கம் கூடுதலாக 5 பில்லியன் ரிங்கிட் வழங்குகிறது
21 ஏப்ரல் 2026, 7:47 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
நாட்டின் எரிபொருள் இருப்பு சீராக உள்ளது; RON95 விலை 1.99 ரிங்கிட்டாக நீடிக்கும்
Shalini Rajamogun
27 மே 2026

national
உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டில் போதிய எரிசக்தி விநியோகம் உள்ளது: பிரதமர் அன்வார் உறுதி
Shalini Rajamogun
22 மே 2026

national
பி-ஹெய்லிங் ஓட்டுநர்களின் 'பூடி95' மானிய வரம்பை 250 லிட்டராக உயர்த்தப் பிரதமர் பரிந்துரை
Shalini Rajamogun
18 மே 2026

national
ரஹ்மா மடாணி விற்பனைத் திட்டம் 30,000 இடங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது
Shalini Rajamogun
5 மே 2026

உங்கள் கருத்து என்ன?




