எரிபொருள் விலை உயர்வு: பொதுமக்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்குமாறு சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தல்

20 ஏப்ரல் 2026, 4:25 AM
எரிபொருள் விலை உயர்வு: பொதுமக்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்குமாறு சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தல்

ஷா ஆலம், ஏப்ரல் 20 - மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் போக்குகளால் எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்ந்து வருவது குறித்து சிலாங்கூர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கவலை தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் சிக்கனமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சர்வதேசச் சூழலால் ஏற்பட்டுள்ள இந்த எரிசக்தி விலை மாற்றம், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுத்து, மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவினங்களை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் 15-வது கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய மாண்புமிகு சுல்தான் அவர்கள், தற்போதைய சவாலான பொருளாதாரச் சூழலை எதிர்கொள்ள அனைத்துத் தரப்பினரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"எனது அரசாங்கத்திற்கும் சிலாங்கூர் மக்கள் அனைவருக்கும் ஆலோசனையை வழங்குகிறேன். தற்போதைய இக்கட்டான பொருளாதார நிலையில் அனைவரும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன்," என அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

இந்த விழாவில் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி ஹாஜா நோராஷிகின் மற்றும் சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து உரையாற்றிய சுல்தான் அவர்கள், மாநில அரசாங்கம் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, மக்களின் சுமையைக் குறைக்கும் வகையிலான அத்தியாவசியத் திட்டங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.

ஒவ்வொரு செலவினமும் குறிப்பாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகபட்ச நன்மைகளைத் தருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆடம்பரமான மற்றும் வீணான செலவுகளை முற்றாகத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"மாநிலத்தின் ஒவ்வொரு கொள்கை மற்றும் திட்டமிடலின் போதும் மக்களின் நலனே முதன்மையானதாக இருக்க வேண்டும் என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்," எனச் சிலாங்கூர் சுல்தான் அவர்கள் மிகவும் தீர்க்கமாகத் தனது உரையில் பதிவு செய்துள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.