உணவகங்களின் தூய்மை பராமரிப்பில் மெத்தனம்: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி நடவடிக்கை

17 ஏப்ரல் 2026, 8:15 AM
உணவகங்களின் தூய்மை பராமரிப்பில் மெத்தனம்: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி நடவடிக்கை

ஷா ஆலம், ஏப்ரல் 17: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) தனது நிர்வாக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களின் தூய்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொண்டு வரும் சோதனைகளில், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் மட்டும் 161 உணவகங்கள் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இந்தச் சோதனைகளின் முடிவில், 2007-ஆம் ஆண்டு பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி உணவகங்களுக்கான துணைச் சட்டத்தின் கீழ் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட உணவகங்களுக்கு எதிராக மொத்தம் 251 அபராத நோட்டீஸ்கள் (Compounds) வழங்கப்பட்டுள்ளன.

மேலும், சுகாதாரத் தரநிலைகளைப் பின்பற்றாத 43 உணவகங்களை உடனடியாக மூடுமாறும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளதாக அதன் கார்ப்பரேட் தொடர்பு பிரிவின் ஊடகச் செயலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உணவக உரிமையாளர்களிடையே நிலவும் குறைந்த அளவிலான விழிப்புணர்வே இத்தகைய நடவடிக்கைகளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சமையலறை கழிவுநீர் வடிகட்டிகளை (Grease Trap) முறையாகப் பராமரிக்காதது மற்றும் உணவுக்கழிவுகளைச் சீரான முறையில் மேலாண்மை செய்யத் தவறியது போன்ற தவறுகள் கண்டறியப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, முறையான அனுமதியின்றி உணவகங்களில் கட்டுமானங்களை மேற்கொண்டது மற்றும் நீர் ஓட்டத்தைத் தடுக்கும் வகையில் குழாய்களைப் பொருத்தி பராமரிப்புப் பணிகளுக்கு இடையூறு விளைவித்தது போன்ற அத்துமீறல்களும் இந்த நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்தன.

மாநகரத்தின் வடிகால் அமைப்பு குறித்துப் பேசுகையில், தற்போதைய நிலையில் வடிகால்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும், முழுமையான மேம்பாட்டுப் பணிகள் இப்போதைக்குத் தேவையில்லை என்றும் மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், முன்னுரிமை மற்றும் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் அவ்வப்போது பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் படிப்படியாகத் தொடரும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தூய்மை மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றுவதில் வணிகர்கள் இன்னும் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்றும், சட்டத்தை மீறுபவர்கள் மீது எவ்வித சமரசமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.

நகரின் சுற்றுச்சூழல் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்யப் பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.