ஷா ஆலம், ஏப்ரல் 16: போக்குவரத்து காவல்துறைஅதிகாரி ஒருவரைக் கொலை செய்ய முயன்றது மற்றும் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியது உள்ளிட்ட எட்டு குற்றச்சாட்டுகளின் கீழ், 40 வயதான முகமட் கமல் ராஜ் ஷண்முகம் அப்துல்லா எனும் இன்ஸ்பெக்டர் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட 40 வயதான முகமட் கமல் ராஜ் சண்முகம் அப்துல்லா, குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது எந்தவொரு வாக்குமூலத்தையும் பதிவு செய்யவில்லை.
இன்னும் திருமணம் ஆகாத இவர், ஸ்கிசோஃப்ரினியா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கையின் போது, "எனக்கு 'சூனியம்' வைக்கப்பட்டுள்ளது, எனக்கு எதுவும் நினைவில் இல்லை" என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
குற்றச்சாட்டின்படி, முகமட் கமல் ராஜ், பெரோடுவா ஆக்ஸியா ரக காரை கொண்டு போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொலை செய்யும் நோக்கில் மோதியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். இந்தச் செயல் மரணத்தை விளைவிக்கும் என்று தெரிந்தே செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி, இரவு சுமார் 10.47 மணியளவில், கோலாலம்பூரில் உள்ள ஜாலான் சுல்தான் யாஹ்யா பெட்ராவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, தண்டனைச் சட்டம் செக்ஷன் 307-இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
ஒருவேளை இந்த நடவடிக்கையால் சம்பந்தப்பட்ட நபருக்குக் காயம் ஏற்பட்டிருந்தால், தண்டனைக் காலம் 20 ஆண்டுகள் வரை அதிகமாக சட்டத்தில் இடமுண்டு.








