ஷா ஆலம், ஏப்ரல் 16: மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் நெருக்கடியின் தாக்கங்களை எதிர்கொள்ள, சிலாங்கூர் மாநில அரசு RM130.42 மில்லியன் ஒதுக்கீட்டில் 'சிலாங்கூர் பின்னடைவு வலுவூட்டல் தொகுப்பை' (Pakej Pengukuhan Daya Tahan Selangor) அறிமுகப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்கும் இந்த முதல் கட்டத் திட்டம், உணவுப் பாதுகாப்பு விநியோகத்தை வலுப்படுத்துவதையும், பணவீக்க அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மறுசீரமைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கையின் கீழ், இந்தத் திட்டம் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு இலக்கு உதவிகளையும் வழங்கும்.
உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, மாநிலத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் 'ஜெலாஜா ஏசான் ரஹ்மா' மலிவு விலை விற்பனைத் திட்டத்திற்காகக் கூடுதலாக 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாநிலத்தின் உணவு இருப்புக்களைப் பெருக்கும் பொருட்டு சிலாங்கூர் உணவுக் கிடங்கிற்கு 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பணவீக்கத்தினால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், 'கித்தா சிலாங்கூர் வவுச்சர்' திட்டத்தின் கீழ் 50,000 தகுதியுள்ள குடிமக்களுக்கு மாதம் 100 ரிங்கிட் வீதம் ஆறு மாதங்களுக்கு வழங்க 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலை இழப்பு அல்லது வருமானக் குறைபாட்டினால் எவரும் கடும் வறுமைக்குத் தள்ளப்படக்கூடாது என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது.
போக்குவரத்து மற்றும் கல்வித் துறையிலும் சிலாங்கூர் அரசு பல சலுகைகளை அறிவித்துள்ளது. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க 50,000 பேருக்குத் தலா 30 ரிங்கிட் வீதம் ஆறு மாதங்களுக்கு வழங்க 5.4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மாநிலத்திலுள்ள 873 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உள்ளூர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இலவச காலை உணவுத் திட்டம் முதல் முறையாகச் செயல்படுத்தப்படவுள்ளது.
விவசாயத் துறையைப் பொறுத்தமட்டில், எரிபொருள் மற்றும் இடுபொருள் செலவுகளை ஈடுகட்ட 25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 18,000 நெல் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 500 ரிங்கிட் வீதமும், 2,000 மீனவர்களுக்கு மாதம் 300 ரிங்கிட் வீதமும், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பாளர்களுக்கு மாதம் 450 ரிங்கிட் வீதமும் ஆறு மாதங்களுக்குத் தடையின்றி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
தொழில்முனைவோர் மற்றும் கட்டுமானத் துறையினரையும் கருத்தில் கொண்டுள்ள மாநில அரசு, 'கொஹிஜ்ரா' (KOHIJRAH) கூட்டுறவு அமைப்பு மூலம் சில்லறை மற்றும் தளவாடத் துறைகளுக்கு 6 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்குகிறது.
மேலும், 'பிளாட்ஸ்' (PLATS) தளம் வரும் மே மாதம் முதல் விரிவுபடுத்தப்பட்டு கூடுதல் சிறு வணிகர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.
கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் விநியோகச் சீர்குலைவுகளைத் தவிர்க்க 'இன்வெஸ்ட் சிலாங்கூர்' மற்றும் மாநில பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு ஆகியவை சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.








