ஷா ஆலம், ஏப்ரல் 15 – சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக் மற்றும் பெட்டாலிங் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் மட்டுமின்றி கெடா, பினாங்கு, பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் இதேபோன்ற மோசமான வானிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஒரு மணிநேரத்திற்கு 20 மில்லிமீட்டருக்கும் (mm/jam) அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படும் போது அல்லது ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை நீடிக்கும் என்று கணிக்கப்படும் வேளை இத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. இந்த எச்சரிக்கையானது அதிகபட்சம் ஆறு மணிநேரம் மட்டுமே செல்லுபடியாகும் குறுகிய கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வானிலை தொடர்பான உடனுக்குடனான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களைப் பெற பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தை நாடலாம் அல்லது 'myCuaca' செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.






