ஷா ஆலம், ஏபரல் 14 - சுங்கை பூலோ சிறைச்சாலை வளாகத்தில் காவல்துறை பாதுகாப்பில் இருந்த கைதி ஒருவர் தப்பியோடியதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து மலேசிய சிறைத்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஷா ஆலமில் இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், இணையத்தில் பரவி வரும் அந்தப் பதிவு உண்மையானதா என்பது குறித்தும், அதன் பின்னணி மற்றும் மூலம் குறித்தும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைத்துறை வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், அக்காணொளியின் நம்பகத்தன்மை மற்றும் அது எப்போது, யாரால் எடுக்கப்பட்டது என்பது போன்ற விவரங்கள் தற்போது ஆராயப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே வேளையில், நாட்டின் சீர்திருத்த நிறுவனங்களின் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான முன்னுரிமையாகும் என்பதை வலியுறுத்தியுள்ள சிறைத்துறை, பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவை உடனடியாகக் களைந்து மேம்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.
மேலும், இந்தப் பணியில் கவனக்குறைவாகச் செயல்பட்ட அல்லது விதிமுறைகளை மீறிய எவர் மீதும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் தேவையற்ற ஊகங்களை வெளியிட வேண்டாம் என்றும், தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய வதந்திகள் அதிகாரப்பூர்வ விசாரணைக்கும் பொது அமைதிக்கும் இடையூறாக அமையும் என்பதால் பொதுமக்கள் பொறுப்புடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.








