கோலாலம்பூர், ஏப்ரல் 12 : நாட்டின் எரிபொருள் விநியோகம் தற்போதைய நிலையில் போதுமான அளவில் உள்ளதாக உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவினத் துறை துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஃபுசியா சல்லே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
எனவே, எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகக் கருதி பொதுமக்கள் யாரும் தேவையற்ற முறையில் பீதியடைய வேண்டாம் என்றும், தங்களின் வழக்கமானத் தேவைகளுக்கு ஏற்ப மட்டும் எரிபொருளைக் கொள்முதல் செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமது முகநூல் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் மிக அவசியம் என்று குறிப்பிட்டார். ஒரு சில எரிபொருள் நிலையங்களில் ஏற்பட்டுள்ள தற்காலிக விநியோகத் தடையை அரசாங்கம், குறிப்பாக உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN), தொழில் துறையினருடன் இணைந்து மிக நெருக்கமாகக் கண்காணித்து வருவதாக அவர் விளக்கமளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட நிலையங்களில் விநியோகத்தைச் சீர்படுத்துவதற்கான மீட்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் உறுதி அளித்தார்.
முன்னதாக, ஷெல் மலேசியா டிரேடிங் (Shell Malaysia Trading Sdn Bhd) நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், சில குறிப்பிட்ட பகுதிகளில் எதிர்பாராத விதமாக எரிபொருளுக்கான தேவை திடீரென அதிகரித்துள்ளதால், ஒரு சில நிலையங்களில் தற்காலிகத் தட்டுப்பாடு நிலவக்கூடும் என்று தெரிவித்திருந்தது.
பாதிக்கப்பட்ட அந்த நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை விரைவாகச் சீர் செய்யத் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இதற்கிடையில், இது தொடர்பான மேலதிகத் தகவல்கள் அவ்வப்போது பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று துணை அமைச்சர் ஃபுசியா சல்லே கூறினார்.








