ஷா ஆலம், ஏப்ரல் 11: சிலாங்கூர் மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவு அமைப்பை மேம்படுத்தும் நோக்கில், அவர்களது குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் ஆரம்பக்காலப் பயிற்சிகளை வழங்குவதில் மாநில அரசு அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
மாற்றுத்திறனாளிகளைப் பராமரிப்பவர்கள், எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க அவர்களைத் தயார்படுத்துவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
இது குறித்து மாநில மகளிர் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறைக்கான நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி அளித்த நேர்காணலில், பராமரிப்பாளர்களுக்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதன் மூலம் அவர்களது மேலாண்மைத் திறனை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"குறிப்பாக, 'சிலாங்கூர் சிறப்புக் குழந்தைகளுக்கான பெற்றோர் பயில்திட்டம்' (Selangor Special Needs Children Parents Module) மற்றும் 'யானிஸ் அகாடமி' (Akademi YANIS) போன்ற திட்டங்களின் மூலம், குடும்ப உறுப்பினர்கள் மாற்றுத்திறன் சார்ந்த பிரச்சனைகளை முழுமையாகப் புரிந்துகொண்டு அவற்றை எதிர்கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கப்படும்.
இத்திட்டங்கள் குடும்பத்தினருக்கு ஆரம்பக்கால விழிப்புணர்வை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அன்றாடச் சவால்களைச் சமாளிப்பதற்கான தன்னம்பிக்கையையும் நடைமுறைத் திறன்களையும் அவர்களுக்கு வழங்குகின்றன," என்று அவர் விளக்கினார்.
மாநில செயலகக் கட்டிடத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நேர்காணலின் போது, சிலாங்கூர் அரசின் ஒவ்வொரு கொள்கையும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாகவே உருவாக்கப்படுகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
'சிலாங்கூர் பெண்கள் கொள்கை மற்றும் செயல் திட்டம் 2024-2026' மற்றும் 'சிலாங்கூர் பராமரிப்புப் பொருளாதாரக் கொள்கை 2026-2030' ஆகியவை இதற்குச் சான்றாகும்.
மேலும், 'சிலாங்கூர் மாநில மாற்றுத்திறனாளிகள் கொள்கை' தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் நடைபெறவுள்ள மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது அது அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சிலாங்கூர் பொருளாதாரச் செயல் மன்றம் மற்றும் சமூக நலத்துறை (JKM) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 'மாற்றுத்திறனாளிகளுக்கான சமத்துவப் பயிற்சி' (Disability Equality Training) திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.
இப்பயிற்சியின் மூலம் அரசு நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அதிகார அமைப்புகள் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை ஆழமாகப் புரிந்துகொண்டு, வேலைத்தலங்களில் அவர்களுக்குச் சமமான வாய்ப்புகளை வழங்குவதை உறுதி செய்ய முடியும்.
இத்தகைய விரிவான அணுகுமுறைகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு, ஒரு வலுவான சமூக ஆதரவுச் சூழலை உருவாக்கும் என்று அன்ஃபால் சாரி நம்பிக்கை தெரிவித்தார்.








