ஷா ஆலம், ஜூலை 2: சிலாங்கூர் மாநில அரசால் வழங்கப்படும் ‘ஸ்கீம் மெஸ்ரா உசியா எமாஸ்’ (SMUE) மற்றும் ‘ஸ்கீம் மெஸ்ரா இன்சான் இஸ்திமேவா’ (SMIS) ஆகிய முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களின் கீழ், மூன்றாம் கட்டப் பயனீட்டாளர்கள் தங்களுக்கான பற்றுச்சீட்டுகளை (Baucar) பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் பிறந்த இந்தத் திட்டங்களின் உறுப்பினர்கள், தங்களின் பற்றுச்சீட்டுகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள முடியும்.
தகுதிபெற்ற பயனாளிகள் அனைவரும் தத்தம் பகுதிகளில் உள்ள மாநில சட்டமன்றத் தொகுதி (DUN) மக்கள் சேவை மையங்களை நாடி இந்த பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இத்திட்டம் மற்றும் பற்றுச்சீட்டு விநியோகம் குறித்த முழுமையான விபரங்களைப் பெற விரும்பும் பொதுமக்கள், mesra.yawas.com.my என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை நாடலாம் அல்லது 03-5481 8800 என்ற எண்கள் வழி 'யாவாஸ்' (YAWAS) அமைப்பைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் (OKU) நலனுக்காக இத்திட்டத்திற்கு சிலாங்கூர் அரசு 55 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







