ஷா ஆலம், ஏப்ரல் 10 – பொதுமக்களுக்கு வேகமாகவும் துல்லியமாகவும் தகவல்களைக் கொண்டு சேர்க்கும் நோக்கில், இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்ட வானிலை எச்சரிக்கை அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பயனர்களின் கைப்பேசிகளுக்கு இந்த அமைப்பு நேரடியாக எச்சரிக்கை செய்திகளை அனுப்பும் என்றும், இதன் மூலம் அவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கப் போதுமான அவகாசம் கிடைக்கும் என்றும் மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் (மெட்மலேசியா) தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
தற்போது பயன்பாட்டில் உள்ள 'MyCuaca' செயலி, இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற வழிமுறைகளை மேம்படுத்தும் ஒரு முயற்சி இதுவாகும் என்று டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெளிவுபடுத்தினார்.
"மெட்மலேசியா இந்த முயற்சியில் தனியாகச் செயல்படவில்லை. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) பேரிடர் எச்சரிக்கை அமைப்பை மேம்படுத்த எப்போதும் முயற்சி செய்து வருகிறது."
"எனவே, ஒரு குறிப்பிட்ட பகுதியில் பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டால், அப்பகுதியில் உள்ள அனைத்துக் கைப்பேசி பயனர்களும் ஆரம்பக்கட்ட எச்சரிக்கையைப் பெறுவார்கள். இதனால், அவர்கள் உடனடியாகச் செயல்படப் போதுமான நேரம் கிடைக்கும்," என்று அவர் மீடியா சிலாங்கூரின் 'பிச்சாரா செமாசா' நிகழ்ச்சியில் கூறினார்.
டிஜிட்டல் தொழில்நுட்பம் தவிர, குறிப்பாக வெள்ளம், சுனாமி மற்றும் திடீர் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் சைரன் முறையும் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
"மெட்மலேசியா கீழ் சுனாமி சைரன்களும், நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (JPS) கீழ் நதி நீர்மட்ட எச்சரிக்கை சைரன்களும், தாது மற்றும் புவி அறிவியல் துறை (JMG) கீழ் நிலச்சரிவு எச்சரிக்கை சைரன்களும் உள்ளன. மேலும், வனத்துறையின் கீழ் சுற்றுலாப் பகுதிகளில் சைரன்கள் பொருத்தப்பட்டுள்ளன."
"உட்புறப் பகுதிகளில் அரசாங்கம் இணையச் சேவையை விரிவுபடுத்தி வருகிறது. அங்குள்ள மக்களிடமும் கைப்பேசி நிச்சயம் இருக்கும் என்பதால், அவர்களும் பேரிடர் குறித்த ஆரம்பக்கட்ட எச்சரிக்கைகளைப் பெறுவார்கள்," என்றார்.
குறிப்பாக, கணிக்க முடியாத வானிலை நிலவும் சூழலில், ஆரம்பக்கட்ட எச்சரிக்கைகள் திறம்படச் சென்றடைவதை உறுதிசெய்யப் பல்வேறு அரசு நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன என்று அவர் மேலும் விளக்கினார்.
"தகவல்களை வேகமாகவும் துல்லியமாகவும் வழங்குவதன் மூலம், உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்க முடியும்," என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், குழப்பங்களைத் தவிர்க்க, பொதுமக்கள் அதிகாரப்பூர்வத் தளங்களிலிருந்து தகவல்களைப் பெறுமாறு அவர் அறிவுறுத்தினார்.
'MyCuaca' செயலி மற்றும் மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வத் தளங்களைப் பயன்படுத்துவது, மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளைச் சிறப்பாகத் திட்டமிட உதவும் என்றும் அவர் கூறினார்.
வானிலை எச்சரிக்கைகள் நேரடியாகக் கைப்பேசிக்கு அனுப்பப்படும் - தகவல்கள் வேகமாகவும் துல்லியமாகவும் சென்றடையும்
10 ஏப்ரல் 2026, 8:52 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
3 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை
Bernama
28 ஆகஸ்ட் 2026

national
சிலாங்கூர் உட்பட பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை: மெட்மலேசியா
Bernama
16 ஆகஸ்ட் 2026

national
குறைவான மழையால் புகை மூட்டம் 2-5 தினங்களுக்கு நீடிக்கும் : வானிலை ஆய்வுத் துறை
Bernama
13 ஆகஸ்ட் 2026

national
சிலாங்கூரின் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மெட்மலேசியா
Media Selangor Team
11 ஆகஸ்ட் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



