பொருளாதார வளர்ச்சிக்காக சிலாங்கூரின் முதலீட்டு வியூகம் மறுசீரமைப்பு

9 ஏப்ரல் 2026, 8:36 AM
பொருளாதார வளர்ச்சிக்காக சிலாங்கூரின் முதலீட்டு வியூகம் மறுசீரமைப்பு

ஷா ஆலம், ஏப்ரல் 9: மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் சூழலுக்கு மத்தியில் மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுவாக வைத்திருக்க, சிலாங்கூரின் முதலீட்டு வியூகம் உள்நாட்டு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மறுசீரமைக்கப்படும்.

வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளைக் கட்டுப்படுத்துவது இதன் நோக்கமல்ல, மாறாக அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் உலகளாவிய சந்தைகளில் போட்டியிடும் ஆற்றல் கொண்ட உள்நாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதே ஆகும்
என்று மாநில முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.

குறிப்பாக, மாநிலத்தில் உள்ள பல சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (IKS) நவீன தொழில்நுட்பத்துடன் போட்டித்தன்மையுடன் செயல்படுவதால், அவற்றின் மீது கவனம் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.

"இந்த நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை ஆசியப் பிராந்தியம் போன்ற பெரிய சந்தைகளுக்கு கொண்டு செல்ல நாங்கள் உதவுவோம். இதன் மூலம், கிடைக்கும் லாபத்தை அந்த நிறுவனங்கள் மீண்டும் சிலாங்கூருக்கே கொண்டு வரும்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

உலகப் பொருளாதார நெருக்கடி இதுவரை மாநில முதலீடுகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், பொருளாதாரத்தை திடமாக வைத்திருக்கத் தேவையான தணிப்பு நடவடிக்கைகளைத் தனது தரப்பு தயாராக வைத்திருப்பதாக அவர் விளக்கினார்.

"கொள்கைகள் உட்பட அனைத்திலும் மாற்றங்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். தற்போதைய சூழலுக்கு ஏற்ப நாம் மாற வேண்டும். இப்போது ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறோம், எனவே இந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப விரைவாக மாற வேண்டும்," என்றார் அவர்.

கடந்த ஆண்டு, சிலாங்கூர் RM60 பில்லியனுக்கும் அதிகமான முதலீட்டை இலக்காகக் கொண்டிருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டு இலக்கான RM55 பில்லியனை விட அதிகமாகும்.

மலேசிய புள்ளிவிவரத் துறையின்படி, 2024-ஆம் ஆண்டில் RM432.1 பில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (KDNK) நாட்டின் பொருளாதாரத்தில் சிலாங்கூர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

இந்த சாதனை, நாட்டின் ஒட்டுமொத்த KDNK-விற்கு 26.2 விழுக்காடு பங்களிப்பை அளித்து, தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளில் சிலாங்கூரின் முக்கியப் பங்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

மாநிலம் 6.3 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து, தேசிய சராசரியையும் மிஞ்சியுள்ளது.

கடந்த ஆண்டு சிலாங்கூர் RM83.9 பில்லியன் முதலீட்டைப் பதிவு செய்துள்ளதாக ஸீ ஹான் முன்னதாகத் தெரிவித்திருந்தார். இது, மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் வணிகச் சூழல் மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

முதலீட்டு எண்ணிக்கையை விட, நீண்ட காலத்திற்கு உள்ளூர் பொருளாதாரத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முதலீடுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் விளக்கினார்.

உயர்தர வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், தொழில்துறை சூழலை வலுப்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்தை ஊக்குவித்தல் போன்றவை முதலீட்டு முன்னுரிமைகளில் அடங்கும் என்று அவர் உறுதியாகக் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.