ஷா ஆலம், மார்ச் 27: தற்போதைய வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் ஒவ்வொரு செலவையும் கண்காணித்து, நிதிக் கடப்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிதிப் புழக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, செலவிடப்படும் ஒவ்வொரு ரிங்கிட்டையும் கண்காணிப்பதே இப்போது எடுக்க வேண்டிய மிக முக்கியமான படியாகும் என்று நிதித் துறை செல்வாக்காளர், அஸ்ராய் முகமட் கூறினார்.
பணம் வரும் மற்றும் போகும் வழியைத் தெளிவாகப் புரிந்துகொள்ள, நுகர்வோர் தங்கள் தினசரி செலவுகளைக் குறித்து வைக்கத் தொடங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
"மானியம் வழங்கப்பட்டாலும், பெட்ரோல் போன்ற பொருட்களின் விலை உயரும்போது, அது தினசரி செலவுகளை நிச்சயம் பாதிக்கிறது. அதனால் தான் நாம் ஒவ்வொரு ரிங்கிட்டையும் கண்காணித்து, செலவுகளைக் குறிக்கத் தொடங்க வேண்டும்," என்றார் அவர்.
சவாலான இந்த பொருளாதாரச் சூழலில், விருப்பங்களை விட தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
புதிய நிதிச் சுமைகளைத் தவிர்ப்பதற்காகப், புதிய கைபேசி, கார் அல்லது வீடு வாங்குவது போன்ற அவசரமில்லாத விஷயங்களைத் தள்ளிப்போடுவது நல்லது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஓடிடி தள சந்தாக்கள், வெளியில் சாப்பிடுவது மற்றும் பொழுதுபோக்கு போன்ற வாழ்க்கை முறை செலவுகளையும் நிதியைக் கட்டுப்படுத்தக் குறைக்க வேண்டும்.
அதே நேரத்தில், எதிர்பாராத சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கான ஒரு தயாரிப்பு நடவடிக்கையாக, குறைந்தது ஆறு மாத சம்பளத்திற்குச் சமமான அவசரகால நிதியை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அஸ்ராய் வலியுறுத்தினார்.
"வருமானத்தை அதிகரிக்கும் முயற்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன, ஆனால் இந்த சவாலான பொருளாதார நிலையில் அது நடைமுறைக்கு சாத்தியமானதாக இருக்க வேண்டும்."
"முக்கியமான விஷயம் என்னவென்றால், மாதாந்திர வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்து, மாதத்திற்கு 30 ரிங்கிட் அல்லது ஒரு நாளைக்கு 1 ரிங்கிட் என சிறிய தொகையாக இருந்தாலும் சேமிக்கத் தொடங்குவது அவசியம்," என்று அவர் மேலும் கூறினார்.








