காவல்துறை அதிகாரியை நோக்கி இறைச்சி வெட்டும் கத்தியை வீசிய ஆடவர் கைது

9 ஏப்ரல் 2026, 5:59 AM
காவல்துறை அதிகாரியை நோக்கி இறைச்சி வெட்டும் கத்தியை வீசிய ஆடவர் கைது

ஷா ஆலம், ஏப்ரல் 9: கோல லங்காட், தெலுக் மெங்குவாங் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஆடவர் ஒருவர் காவல்துறை அதிகாரியை நோக்கி இறைச்சி வெட்டும் கத்தியை வீசிய சம்பவம் செவ்வாயன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலுக் பாங்லிமா காராங் பகுதியின் ரோந்து வாகன (MPV) அதிகாரிகள் மூலம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்தது. அதனைத்
தொடர்ந்து, காவல்துறை குழுவினர் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்ததாகக் கோல லங்காட் மாவட்டக் காவல்துறை தலைவர், கண்காணிப்பாளர் முகமட் அக்மல் ரிசால் ராட்சி தெரிவித்தார்.

“சம்பவ இடத்திற்குச் சென்றபோது, உள்ளூர் ஆடவர் ஒருவர் இறைச்சி வெட்டும் கத்தி மற்றும் பிரம்புடன் மிகவும் ஆக்ரோஷமாகச் செயல்படுவதைக் கண்டனர். ஆரம்பகட்ட விசாரணையில், சந்தேக நபர் தெலுக் மெங்குவாங், ஜாலான் பண்டான் 2-இல் உள்ள உணவகத்தில் இருந்த பல பொருட்களை உடைத்துச் சேதப்படுத்தியது தெரியவந்துள்ளது,” என அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

மேலும், சந்தேக நபர் உணவகத்தை சேதப்படுத்தியது மட்டுமல்லாமல், அருகிலிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான மூன்று வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளார்.

"அதுமட்டுமின்றி, சந்தேக நபர் காவல்துறை
அதிகாரிகள் மற்றும் அவர்களது ரோந்து வாகனத்தை (MPV) நோக்கியும் தனது ஆயுதங்களை வீசி வன்முறையில் ஈடுபட்டு, அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினார்.”

"சம்பவ இடத்தில் அதிகாரிகளின் விரைவான மற்றும் திறமையான நடவடிக்கையால், சந்தேக நபர் வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டார்," என்று அக்மல்
ரிசால் கூறினார்.

பின்னர் அந்நபர்
மேல் பரிசோதனைக்காகக் கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்த வழக்கு, குற்றவியல் சட்டத்தின் 353 மற்றும் 427-வது பிரிவுகளின் கீழும், வெடிக்கும் பொருட்கள் மற்றும் அபாயகரமான ஆயுதங்கள் சட்டம் 1958-இன் பிரிவு 6(1)-இன் கீழும் விசாரிக்கப்படுகிறது.

“இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தை
அல்லது 03-3187 2222 என்ற எண்ணில் கோல லங்காட் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் செயல்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவலாம்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, இச்சம்பவம்
தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.