கோலாலம்பூர், ஏப்ரல் 9 - மானிய RON95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM1.99-ஆக நீடிக்கிறது, அதே வேளையில் டீசல் விலை 70 சென் உயர்கிறது என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் சந்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவினாலும், மக்களுக்கும் குறிப்பிட்ட சில துறைகளுக்கும் அரசாங்கம் தொடர்ந்து மானிய விலையை வழங்கி வருகிறது.
பூடி மடாணி திட்டத்தின் (BUDI95) கீழ் RON95 பெட்ரோலின் மானிய விலை, ஏப்ரல் 9 முதல் 15 வரையிலான காலத்திற்கு லிட்டருக்கு RM1.99-ஆக நீடிக்கிறது. மானியமற்ற சில்லறை விலை 40 சென் அதிகரித்து லிட்டருக்கு RM4.27 ஆக உயர்ந்துள்ளது.
டீசலைப் பொறுத்தவரை, சபா, சரவாக் மற்றும் லபுவானில் மானிய விலையிலான சில்லறை விலை லிட்டருக்கு RM2.15-ஆக நீடிக்கிறது. தீபகற்ப மலேசியாவில் மானியமற்ற டீசலின் விலை 70 சென் அதிகரித்து லிட்டருக்கு RM6.72 ஆக உயர்ந்துள்ளது என்று அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 1 முதல், BUDI95 திட்டத்திற்கான தகுதி வரம்பு மாதத்திற்கு 200 லிட்டராக தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், சபா, சரவாக் மற்றும் லபுவானில் கசிவு மற்றும் கடத்தலைத் தடுக்க டீசல் நிரப்புவதற்கும் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மானிய பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பு (SKPS) மற்றும் மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பு (SKDS) ஆகியவற்றின் கீழ் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை முறையே RM2.05 மற்றும் RM2.15-ஆக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக, பூடி தனிநபர் மற்றும் பூடி வேளாண்-பொருள் பிரிவில் உள்ள பயனாளிகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கான கூடுதல் பூடி டீசல் பண உதவியாக RM100-ஐ அரசாங்கம் வழங்குகிறது. இதன் மூலம் மொத்த உதவித்தொகை RM300 ஆகிறது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை போர்நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து குறைந்திருந்தாலும், மலேசியாவில் எரிபொருள் சில்லறை விலைகள் உடனடியாகக் குறையாது என்று நிதி அமைச்சு விளக்கியுள்ளது. ஏனெனில், எரிபொருள் நிலையங்களில் விற்கப்படும் விலை முந்தைய வாரத்தின் சராசரி விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
"கடந்த ஐந்து வாரங்களில் உலகச் சந்தை உச்சத்தில் இருந்தபோது விநியோகச் செலவுகள் அதிகமாக இருந்தன. பெட்ரோல் ஒரு பீப்பாய்க்கு சுமார் 150 அமெரிக்க டாலரையும், டீசல் ஒரு பீப்பாய்க்கு சுமார் 250 அமெரிக்க டாலரையும் எட்டியது. இதுவே தற்போதைய உள்நாட்டு சில்லறை விலையில் பிரதிபலிக்கிறது," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
நாட்டின் எரிசக்தி விநியோகம் நிலையாக இருப்பதை உறுதிசெய்ய, உலகளாவிய முன்னேற்றங்களை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும். அதே நேரத்தில், இலக்கு ஆதரவு வழிமுறைகள் மூலம் மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் தொடரும்.
"நாட்டின் பொருளாதார நலன் மற்றும் மக்களின் நல்வாழ்வு தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய, மடாணி அரசாங்கம் நிதித் தேவைகளையும் மக்களின் பாதுகாப்பையும் கவனமாகவும் விவேகமாகவும் சமநிலைப்படுத்தும்," என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.
-- பெர்னாமா
உலகச் சந்தையில் எரிபொருள் விலை ஏற்றம்: மக்களுக்கான மானிய விலையை நிலைநிறுத்தியது நிதி அமைச்சு
9 ஏப்ரல் 2026, 2:54 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
செப். 9 வரை பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 5 சென் குறைப்பு
Bernama
3 செப்டெம்பர் 2026

national
ஆகஸ்ட் 12 வரை எரிபொருள் விலையில் லிட்டருக்கு 5 சென் குறைப்பு
Shalini Rajamogun
6 ஆகஸ்ட் 2026

national
எரிபொருள் விலை மாற்றமின்றி தொடரும் என நிதி அமைச்சு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Shalini Rajamogun
11 ஜூன் 2026

national
மேற்கு ஆசியப் பதற்றத்தால் மானியமில்லா பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு
Shalini Rajamogun
23 ஜூலை 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



