ஷா ஆலம், ஏப்ரல் 9: நாட்டில் தற்போது நிலவி வரும் வெப்பமான வானிலை ஓர் அசாதாரண நிகழ்வு அல்ல, மாறாக இது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக ஏற்படக்கூடியதே ஆகும்.
பொதுவாக பிப்ரவரி முதல் ஜூன் வரை வெப்பமான காலநிலை நிலவும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஏப்ரல் வரை வெப்பநிலை உச்சத்தை அடையும் என்றும் மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் (மெடம்லேசியா) தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் கூறினார்.
வடகிழக்கு பருவமழையின் இறுதிக்கட்டத்தில் மழை மேகங்களின் பற்றாக்குறை ஏற்படுவதால் வெப்பநிலை அதிகரிப்பதாகவும், இதன் காரணமாக சூரியக் கதிர்கள் நேரடியாக பூமியின் மேற்பரப்பைத் தாக்குவதாகவும் அவர் விளக்கினார்.
"மேகம் எனும் குடை இல்லாதபோது, பூமியின் மேற்பரப்பு தடையின்றி சூரியனின் வெப்பத்தை நேரடியாகப் பெறுகிறது. இதனால், வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக உயர்கிறது," என்றார்.
"பதிவுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் வெப்பமான வானிலை ஏற்படுகிறது. ஆனால், தற்போதைய சமூகத்தினர் நடப்பு நிகழ்வுகள் குறித்து அதிக விழிப்புணர்வுடன் உள்ளனர். அனைவரும் சமூக ஊடகங்களில் பகிர்வதால் இது வைரலாகிறது. உண்மையில் இந்த வெப்ப வானிலை ஆண்டுதோறும் நிகழும் ஒரு நிகழ்வாகும்," என்று அவர் மீடியா சிலாங்கூரின் ‘பிச்சாரா செமாசா’ நிகழ்ச்சியில் கூறினார்.
மலேசியாவின் சராசரி வெப்பநிலை 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும், ஆனால் பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸைத் தாண்டக்கூடும் என்று முகமட் ஹிஷாம் கூறினார்.
"குறிப்பாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சூரியன் நாட்டிற்கு நேராக இருக்கும்போது, வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது," என்றார் அவர்.
தீபகற்பத்தின் வட மாநிலங்களான பெர்லிஸ் மற்றும் கெடா மற்ற பகுதிகளை விட அதிக வெப்பநிலையைப் பதிவு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் மற்றும் மியன்மார் போன்ற வெப்பமான வானிலையைக் கொண்ட இந்தோனேசினா பிராந்தியத்தின் பெரிய நிலப்பரப்புக்கு அருகாமையில் இருப்பதால் இந்த நிலைமை ஏற்படுகிறது என்று அவர் விளக்கினார்.
"அப்பகுதிகளிலிருந்து வரும் வெப்பம் தீபகற்பத்தின் வடக்கில் உள்ள வெப்பநிலையைப் பாதிக்கிறது, இதனால் மற்ற மாநிலங்களை விட அப்பகுதி வெப்பமாக உள்ளது."
"இந்த ஆண்டு எல் நினோ ஏற்படாதது நமது அதிர்ஷ்டம். ஒருவேளை எல் நினோ உலகைத் தாக்கியிருந்தால், வெப்பத்தின் தாக்கம் இன்னும் கடுமையாக இருந்திருக்கும்," என்றார் அவர்.
உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பும் வெப்பமான வானிலைக்குப் பங்களிப்பதாக அவர் வலியுறுத்தினார். கடந்த சில பத்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் நாட்டின் வெப்பநிலை அதிகரித்திருப்பதை பதிவுகள் காட்டுகின்றன.
எனவே, வானிலை மாற்றங்கள் குறித்து மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், வெப்பப் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க வெப்பமான காலங்களில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போது நிலவும் வெப்பமான வானிலை வழக்கமான ஒன்றுதான் – மெட்மலேசியா
9 ஏப்ரல் 2026, 2:13 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
மலேசியாவில் ஜூன் மாதம் வரை நீடிக்கும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Shalini Rajamogun
6 ஏப்ரல் 2026

national
சிறுவர் பராமரிப்பு மையங்களில் வெளிப்புற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன
Shalini Rajamogun
27 மார்ச் 2026

national
பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை
Shalini Rajamogun
31 மார்ச் 2026

national
திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகளைத் தவிர்க்க பொதுமக்களுக்குக் கடும் எச்சரிக்கை
Shalini Rajamogun
31 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




