ஷா ஆலம், ஏப். 8: மக்களுக்கு இலவசப் பரிசோதனைகள் மூலம் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தும் வகையில், சிலாங்கூர் சாரிங் திட்டம் மாநில அரசின் முக்கிய முன்முயற்சியாகத் தொடரும்.
புற்றுநோய், இதய நோய், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய இந்தத் திட்டம் உதவுவதாகப் பொது சுகாதார ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
நோயாளிகளின் சுமையைக் குறைக்கும் வகையில், குறிப்பாகத் தொற்றுநோயற்ற நோய்களுக்குச் சிகிச்சை, உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கான நிதி உதவியை வழங்க 'பந்துவான் சிஹாட் சிலாங்கூர்' திட்டமும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
"தடுப்பூசி போன்ற அடிப்படைப் பராமரிப்புச் சேவைகளைப் பெறுவதற்கு முதியவர்கள் உட்பட தகுதியான பிரிவினருக்கு உதவ 'இல்திசாம் சிலாங்கூர் சிஹாட்' (ISS) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது."
"எனவே, உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சீரான இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில், வருமுன் காப்பதே சிறந்த நல்வாழ்வுக்கான வழியாகும்," என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.
ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட மாநிலமாக விளங்கும் சிலாங்கூர், மக்களின் நலனைத் தொடர்ந்து உறுதி செய்வதில் பெரும் சவால்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொற்றுநோயற்ற நோய்களின் அதிகரிப்பு, உயர்ந்து வரும் சிகிச்சை செலவுகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த சமூக விழிப்புணர்வை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் ஆகியவை முக்கிய சவால்களில் அடங்கும் என்றார் அவர்.
"அதே நேரத்தில், 'தாலியான் சிஹாட்' (Talian SEHAT) மூலம் மனநல அம்சங்களும் வலுப்படுத்தப்படுகின்றன. இது உளவியல் சமூக உதவி, மானிய விலையில் மனநல சிகிச்சை மற்றும் 'கவுன்சிலர் ஹப் சிஹாட்' மூலம் இலவச ஆலோசனைகளை வழங்குகிறது."
"பதின்ம வயதினர் தங்கள் மனநலத்தை சிறப்பாக நிர்வகிக்க உதவும் வகையில், பள்ளிகளில் முன்னோடித் திட்டமான 'பியர்-இசட்' (Peer-Z) எனப்படும் சக ஆதரவுத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதி கொண்டாடப்படும் உலக சுகாதார தினம், உலகளாவிய சுகாதாரப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றை எதிர்கொள்ள ஊக்குவிக்கவும் உலக சுகாதார அமைப்பால் (WHO) உருவாக்கப்பட்ட ஒரு முன்முயற்சியாகும்
நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய இலவசப் பரிசோதனை திட்டம் தொடர்கிறது
8 ஏப்ரல் 2026, 3:32 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூரில் 16,242 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர்
Shalini Rajamogun
28 ஏப்ரல் 2026

selangor
முதியோர்களுக்கான சுகாதாரப் பரிசோதனை திட்டம்: சிலாங்கூர் மாநில அரசு
Shalini Rajamogun, Siti Rohaizah Zainal
23 ஏப்ரல் 2026

antarabangsa
வங்காளதேசத்தில் ஆண்டுக்கு 24,000 பேர் மரணம் - விழிப்புணர்வு கருத்தரங்கில் எச்சரிக்கை
Shalini Rajamogun
14 மே 2026

national
மருந்து விநியோகத் தட்டுப்பாட்டைத் தவிர்க்கத் தயார் நிலை: சுகாதார அமைச்சு புதிய சிறப்பு பணிக்குழுவை அமைத்தது
Shalini Rajamogun
5 மே 2026

உங்கள் கருத்து என்ன?




