ஷா ஆலம், ஜூலை 6 - சிலாங்கூர் மாநிலம் முழுவதும் ஆறு வெவ்வேறு இடங்களில் இம்மாதம் ஜூலை முழுவதும் நடைபெறவுள்ள 'சிலாங்கூர் சாரிங்' (Selangor Saring) எனும் இலவச ஆரோக்கியப் பரிசோதனை திட்டத்தைப் பொதுமக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தத் திட்டத்தின் கீழ் உடல்நலப் பரிசோதனை, இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், புற்றுநோய் கண்டறிதல் சோதனைகள், கண் மற்றும் பல் பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதாகப் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான மாநில செயற்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் (SELangkah) செயலி மூலம் தனிநபர்களின் ஆரம்பக்கட்ட சுகாதாரப் படிவ மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த இலவசப் பரிசோதனைகள் வழங்கப்படும். இந்தச் செயலியில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு அவர் தனது முகநூல் பதிவின் வாயிலாக ஊக்குவித்துள்ளார்.
இத்திட்டம் சுங்கை ராமல், சுபாங் ஜெயா, மேரு, பண்டார் பாரு கிள்ளான், தாமான் மேடான் மற்றும் ரவாங் ஆகிய ஆறு குறிப்பிட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும்.
நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும், ஆரோக்கியப் பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் மேற்கொண்டுள்ள முதன்மை திட்டங்களில் இந்த 'சிலாங்கூர் சாரிங்' திட்டமும் ஒன்றாகும்.
இத்திட்டத்திற்கானப் பதிவின் போது ஏதேனும் சிரமங்களை எதிர்கொள்ளும் பொதுமக்கள் உதவிக்கு, 1-800-22-6600 என்ற எண்களின் வழி 'செல்ஹெல்ப்' (Selcare helpline) உதவி முனையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.







