கோத்தா கெமுனிங், ஏப் 4; கோத்தா கெமுனிங்கில் அடிக்கடி ஏற்படும் வெள்ள அபாயத்தினால் சில பகுதிகளில் செயல் படுத்தப் படவிருக்கும் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் தொடர்பான விவகாரம், இந்த மாதம் நடைபெற விருக்கும் சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் (DNS) எழுப்பப்படும்.
இத்திட்டத்தின் சமீபத்திய நிலவரம் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து விரிவான விளக்கத்தைப் பெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப் படுவதாக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஸ் தெரிவித்தார்.பருவமழைக் காலம் தொடங்குவதற்குள் இத்திட்டங்கள் நிறைவடைவதை உறுதி செய்வது மிகவும் அவசியம் என்றும், அதன் மூலம் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
"இந்தத் திட்டம் எந்த நிலையில் உள்ளது என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். எந்தவொரு முன்னேற்பாடும் இல்லாமல் பருவமழையை எதிர்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. மாநில அரசு இந்தத் திட்டத்தின் அமலாக்கத்தை விரைவுபடுத்தும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் நேற்று இரவு இங்கு நடைபெற்ற கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியின் ஹரி ராயா Aidilfitri விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் கூறினார்.
கனமழையின் போது அடிக்கடி பாதிக்கப் படும் பகுதிகளில் ஸ்ரீ மூடா, புக்கிட் கெமுனிங், தேசா கெமுனிங், கிரீன்வில் மற்றும் ஆலம் இண்டா ஆகியவை அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். அதே வேளையில், கோத்தா கெமுனிங்கில் நிலவும் போக்குவரத்து நெரிசல், செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான வழி காட்டுதல்-களின் அவசியம் மற்றும் சிலாங்கூரில் தரவு மைய மேம்பாட்டின் நிலைத்தன்மை போன்ற பிரச்சினைகளும் சட்டமன்றக் கூட்டத்தில் எழுப்பப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக, கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியின் ஹரி ராயா விருந்துபசரிப்பு நிகழ்ச்சி நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இதில் 2,000-க்கும் மேற்பட்ட பல்லின மக்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சி, குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 'டுயிட் ராயா' வழங்குவதன் மூலம் மேலும் சிறப்பிக்கப்பட்டது, இது உள்ளூர் சமூகத்தினரிடையே உறவுகளை வலுப்படுத்த உதவியது.








