திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகளைத் தவிர்க்க பொதுமக்களுக்குக் கடும் எச்சரிக்கை

31 மார்ச் 2026, 1:20 AM
திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகளைத் தவிர்க்க பொதுமக்களுக்குக் கடும் எச்சரிக்கை

ஷா ஆலம், மார்ச் 31: தற்போது நிலவும் வெப்பமான, வறண்ட வானிலையால் தீவிபத்து மற்றும் காற்று மாசு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், திறந்த வெளியில் எதையும் எரிக்க வேண்டாம் என பொதுமக்களுக்குச் சுற்றுச்சூழல் துறை (ஜாஸ்) நினைவூட்டியுள்ளது.

அதிக வெப்பநிலை மற்றும் மழை பற்றாக்குறை சூழலை எளிதில் தீப்பற்றக்கூடியதாக மாற்றியுள்ளது. ஒரு சிறிய தீப்பொறி கூட பெரிய, கட்டுப்பாடற்ற தீ மற்றும் புகைமூட்டத்திற்கு வழிவகுக்கும் என ஜாஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"இந்த வெப்பமான காலநிலையில், ஒரு சிறிய கவனக்குறைவு கூட பெரிய பேரழிவைக் கொண்டு வரக்கூடும்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திறந்தவெளி எரிப்பு காற்றை மாசுபடுத்தி, சுவாச அமைப்பைப் பாதிப்பது மட்டுமல்லாமல், காலநிலை மாற்றத்திற்கும் இயற்கை வாழ்விடங்களின் அழிவிற்கும் பங்களிக்கிறது.

குறிப்பாக, கரிசல் மண் பகுதிகளில் ஏற்படும் தீ மிகவும் ஆபத்தானது. ஏனெனில், தீ நிலத்தடியில் பரவி, அதனை அணைப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

எனவே, பொதுமக்கள் குப்பைகள் அல்லது தோட்டக் கழிவுகளை எரிப்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான கழிவு அகற்றும் முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

"சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974-இன் கீழ் திறந்தவெளி எரிப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. இக்குற்றத்தைப் புரிவோருக்கு 1 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்," என்று ஜாஸ் எச்சரித்துள்ளது.

விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்க, திறந்தவெளியில் எரியூட்டப்படும் எந்தவொரு செயலையும் உடனடியாகப் புகாரளிக்குமாறு பொதுமக்களை ஜாஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.