பண்டார் உத்தாமா சமூகத்தினரிடையே ஒற்றுமையை வளர்க்கும் நல்லிணக்க ஒன்றுகூடல் நிகழ்ச்சி

29 மார்ச் 2026, 7:06 AM
பண்டார் உத்தாமா சமூகத்தினரிடையே ஒற்றுமையை வளர்க்கும் நல்லிணக்க ஒன்றுகூடல் நிகழ்ச்சி

ஷா ஆலம், மார்ச் 29: பண்டார் உத்தாமா சட்டமன்றத் தொகுதி (DUN) மக்கள், எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள நல்லிணக்க ஒன்றுகூடல் நிகழ்ச்சி மூலம் தங்களின் அண்டை வீட்டு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

உள்ளூர் சமூகத்தினரின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்ச்சி, SS4B, சுரா பெர்சௌடரான் இஸ்லாம் அரங்கில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி, சமூகத்தினரிடையே நல்லிணக்கத்துடனும் நட்புறவுடனும் மக்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்களிடையே உறவுகளை வலுப்படுத்த இந்த நிகழ்ச்சி ஒரு முக்கிய தளமாக அமைகிறது என்று அதன் சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

“சமூக நல்லிணக்கத்தின் அடித்தளமாக விளங்கும் ஒற்றுமை உணர்வை வளர்க்கவும், மக்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளவும், உறவுகளைப் பலப்படுத்தவும் இந்த ஒன்றுகூடல்
நிகழ்ச்சி ஒரு வாய்ப்பை வழங்குகிறது,” என்று அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜமாலியா, ஐடில்பித்ரி கொண்டாட்டம் ஒரு பண்டிகை மட்டுமல்ல, உள்ளூர் சமூகத்தில் சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாகும் என்றார்.

இது போன்ற சமூக நிகழ்ச்சிகள் மூலம் மேற்கொள்ளப்படும் அணுகுமுறைகள், மக்களிடையே வலுவான ஒற்றுமை உணர்வை உருவாக்கும் என்று அவர் விளக்கினார்.

இந்நிகழ்ச்சியின்
சிறப்பம்சமாக, பார்வையாளர்கள் ஹரி ராயா ஆடை அலங்காரப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த முயற்சி கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிப்பது மட்டுமல்லாமல், மலேசிய சமூகத்தின் பாரம்பரிய ஆடைகளின் தனித்துவத்தையும் பெருமைப்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.

“பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டாடுவதற்கும், பாரம்பரிய உடைகளின் அழகை ஒரு நிதானமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சூழலில் வெளிப்படுத்துவதற்கும் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது,” என்றார் அவர்.

எனவே, பொதுமக்கள், குறிப்பாகப் பண்டார் உத்தாமா சட்டமன்றத் தொகுதி
மக்கள், இந்நிகழ்ச்சியில் தங்களின் சிறந்த ஐடில்பித்ரி ஆடையணிந்து வந்து சிறப்பிக்குமாறு அழைக்கப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.