மலாக்கா, மார்ச் 27: கட்டாய தொழிலாளர் சுரண்டலுக்கான மனித கடத்தல் நடவடிக்கை களில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஏழு நபர்களை காவல்துறையினர் கைது செய்ததுடன், பாதிக்கப் பட்ட 14 பேரையும் மீட்டுள்ளனர்.
இன்று அதிகாலை இம்மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின், ஆட்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புப் பிரிவு (ATIPSOM) D3 பிரிவினர், இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் தாமான் கிளேபாங் பெசார் மற்றும் ஜாலான் தெங்கேரா ஆகிய இரண்டு இடங்களில் இந்தச் சோதனைகளை மேற்கொண்டதாக மலாக்கா மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார் கூறினார்.
"இந்த நடவடிக்கையில், 19 முதல் 38 வயதுக்குட்பட்ட ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சீனா மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்த தலா ஒரு ஆண், தைவான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் மியான்மர், இந்தோனேசியா, பிலிப்பைன் ஆகிய நாடுகளை சேர்ந்த நான்கு பெண்கள் அடங்குவர்," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
"கைது செய்யப்பட்ட அனைவரும் கட்டாய தொழிலாளர் சுரண்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் அதிப்க்சோம் சட்டம் 2007, பிரிவு 12-இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குடிநுழைவுச் சட்டம் 1959/63, பிரிவு 6(1)(c)-இன் கீழும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்படுகிறது."மேலும் கருத்துரைத்த சுல்கைரி, இதே நடவடிக்கையில் 25 முதல் 36 வயதுக்குட்பட்ட 14 பேர்கள் மீட்கப்பட்டதாகக் கூறினார்.
அவர்களில் ஏழு ஆண்களும் ஆறு பெண்களும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மியான்மரைச் சேர்ந்த பெண் ஆவார்.முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இணையவழி மோசடி நடவடிக்-கைகளுக்காகக் கட்டாய தொழிலாளர் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
"பாதிக்கப்பட்டவர்களுக்கு வாடிக்கையாளர் சேவைப் பணி வழங்கப்படும் என்று முதலில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் நாட்டிற்கு வந்தவுடன் மோசடி நடவடிக்கை-களில் ஈடு பட கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர்.
""பாதிக்கப்பட்டவர்கள் கடன் வலையில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் கடவுச்சீட்டுகள் நிர்வாகத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டு, நடமாட்டம் கடுமையாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. அவர்கள் விருப்பமின்றி கூடுதல் நேரம் வேலை செய்யும்படியும் கட்டாயப் படுத்தப் பட்டுள்ளனர், " என்று அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மற்றும் மீட்கப்பட்டவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக மலாக்கா தெங்கா மாவட்ட காவல் துறைத் தலைமையகத்தில் உள்ள விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
"மீட்கப்பட்டவர்கள் அனைவரும் இன்று முதல் ஏப்ரல் 16, 2026 வரை 21 நாட்களுக்கு இடைக்கால பாதுகாப்பு ஆணை (IPO) கோரப்பட்டுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.








