புத்ராஜெயா, மார்ச் 27: 36 மாதங்களுக்கும் மேலாக காலாவதியான மலேசிய ஓட்டுநர் உரிமம் (LMM) வைத்திருப்பவர்கள், இலக்கு மானியமான பூடி மடாணி RON95 (BUDI95) பெற இனி தகுதி பெற மாட்டார்கள்.
மானியம் பெறுவதற்கான தகுதியை நிர்ணயிப்பதில் ஓட்டுநர் உரிமத்தின் நிலை முக்கியப் பங்கு வகிப்பதாகத் சாலைப் போக்குவரத்துத் துறையின் (JPJ) தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார். எனவே, உரிமம் வைத்திருப்பவர்கள் தங்கள் உரிமங்கள் எப்போதும் செயலில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
"செயலில் உள்ள LMM என்பது, அதன் கடைசி புதுப்பித்தல் தேதியிலிருந்து 36 மாதங்களுக்கு மிகாமல் காலாவதியான உரிமம் ஆகும்," என்றார்.
"இந்தக் காலக்கட்டத்தில், உரிமம் வைத்திருப்பவர்கள் BUDI95 மானியத்தைப் பெற தகுதியுடையவர்கள் ஆவர். மேலும், அவர்கள் கூடுதல் சோதனைகள் ஏதுமின்றி தங்கள் உரிமத்தை நேரடியாகப் புதுப்பிக்கலாம்," என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
36 மாதங்களுக்கு மேல் காலாவதியான உரிமத்தை நேரடியாகப் புதுப்பிக்க முடியாது என்றும், உரிமம் வைத்திருப்பவர்கள் எந்தவொரு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியிலும் ஓட்டுநர் தகுதித் தேர்வை மீண்டும் எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எனவே, அனைத்து LMM உரிமதாரர்களும் தங்கள் உரிமங்கள் செயலிழந்து போவதைத் தவிர்க்க, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உரிமம் செயலிழந்து போனால், அவர்கள் BUDI95 மானியத்தைப் பெறுவதற்கான தகுதியை இழக்க நேரிடும்.
"மக்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், மலேசியா மடாணி கொள்கைக்கு ஏற்ப, திறமையான, வெளிப்படையான மற்றும் நேர்மையான சேவைகளை வழங்குவதில் ஜேபிஜ்ர்ர் தொடர்ந்து உறுதியாக இருக்கும்," என்று அவர் கூறினார்.








