ஷா ஆலம், மார்ச் 27: BUDI95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் RON95 பெட்ரோலுக்கான மானியத் தகுதி வரம்பு, எதிர்வரும் ஏப்ரல் 1 முதல் மாதத்திற்கு 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகக் குறைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக எரிபொருள் பயன்பாட்டை மிகவும் விவேகமாக நிர்வகிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பயன்பாட்டு வரம்பு மாற்றியமைக்கப்பட்ட போதிலும், மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் RON95 விலை லிட்டருக்கு RM1.99 ஆகவே நீடிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
“மக்களின் சுமையைக் குறைக்க, BUDI95 விலை லிட்டருக்கு RM1.99 ஆக நீடிக்கும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். BUDI95 பயனாளிகளின் சராசரி பயன்பாடு 100 லிட்டர் என்பதால், 90 விழுக்காடு மக்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள்," என்றார்.
"இ-ஹெய்லிங் மற்றும் பகுதி நேரப் பணியாளர்களுக்கு, அவர்களின் பொறுப்புகள் மற்றும் பணிகளைக் கருத்தில் கொண்டு, உச்சவரம்பு 800 லிட்டராகவே பராமரிக்கப்படும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிப்பதற்கான நாட்டின் உத்திசார்ந்த நடவடிக்கைகள் குறித்த சிறப்புரையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
எண்ணெய் விநியோகம் மீண்டும் சீரடைந்து, உலகப் பொருளாதாரம் மீளும் வரை இந்த மாற்றங்கள் தற்காலிகமானவையே என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
சபா மற்றும் சரவாக் மாநிலங்களைப் பொறுத்தவரை, கசிவைத் தடுக்க நிரப்புதல் கட்டுப்பாடுகளுடன், டீசல் மானியம் லிட்டருக்கு RM2.15 என்ற விகிதத்தில் தொடர்ந்து வழங்கப்படும் என்று அன்வார் கூறினார்.
அதன்படி, இலகுரக பொது தரைவழிப் போக்குவரத்து, சரக்கு மற்றும் தனியார் வாகனங்களுக்கு, ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக 50 லிட்டர் என கொள்முதல் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
"அதே வேளையில், மூன்று டன்னுக்கு மிகாத பொது மற்றும் சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு 100 லிட்டரும், மூன்று டன்னுக்கு அதிகமான வாகனங்களுக்கு 150 லிட்டரும் ஒரு கொள்முதலுக்கு அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது."
"அனைவருக்கும் போதுமான மற்றும் நியாயமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.
நாட்டிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் எரிபொருள் கடத்தலைத் தடுக்க, கண்காணிப்பை கடுமையாக்குமாறு அமலாக்க நிறுவனங்களுக்கு அன்வார் நினைவூட்டினார்.
மானிய முறைகேடுகள் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க உதவிய பொதுமக்களுக்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
RON95 பெட்ரோலுக்கான மானியத் தகுதி வரம்பு மாதத்திற்கு 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகக் குறைக்கப்படும்
27 மார்ச் 2026, 12:58 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
ஆகஸ்ட் 12 வரை எரிபொருள் விலையில் லிட்டருக்கு 5 சென் குறைப்பு
Shalini Rajamogun
6 ஆகஸ்ட் 2026

national
ஆகஸ்ட் 26 வரை மானியமற்ற எரிபொருள் விலை உயர்வு
Bernama
20 ஆகஸ்ட் 2026

national
ஹார்முஸ் நீரிணையில் பதற்றம்: மலேசியாவின் எரிபொருள் விநியோகம் சீராக உள்ளதாக துணைப் பிரதமர் உறுதி
Shalini Rajamogun
13 ஜூலை 2026

national
BUDI95 திட்டத்தின் கீழ் 200 லிட்டர் ஒதுக்கீடு தொடரும்
Shalini Rajamogun
23 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



