ஷா ஆலாம், மார்ச் 26: இங்குள்ள செக்சன் 36, ஜாலான் நாகசாரியில் அமைந்துள்ள இரண்டு ஏக்கர் பரப்பளவிலான மறுசுழற்சி தொழிற்சாலை ஒன்றில் இன்று நண்பகல் வேளையில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்த அவசர அழைப்பு பிற்பகல் 1:24 மணியளவில் கிடைக்கப்பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. தகவல் கிடைத்த 12 நிமிடங்களிலேயே முதல் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்தது.
இந்தத் தீயணைப்புப் பணியில் ஷா ஆலம், தெற்கு கிள்ளான், அண்டலாஸ், கிள்ளான் துறைமுகம், வடக்கு கிள்ளான் மற்றும் புக்கிட் ஜெலுத்தோங் ஆகிய ஆறு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 31 வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திறந்த வெளியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் குவித்து வைக்கப்பட்டிருந்த மறுசுழற்சி பொருட்கள் தீப்பற்றி எரிந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று செயல்பாட்டுத் தளபதி முகமட் ஷாரிம் ஏ மாலெக் தெரிவித்தார். இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.
தற்போது தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதுடன், இது குறித்த விரிவான தகவல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, இப்பகுதியில் உள்ள ஒரு பிரபல பேரங்காடிக்கு அருகாமையில் இந்தத் தொழிற்சாலை அமைந்துள்ள நிலையில், அங்கிருந்து வெளியேறிய அடர்ந்த கரும்புகை பல கிலோமீட்டர் தொலைவிற்குத் தெரிந்ததால் அக்கம் பக்கத்தினர் பெரும் அச்சமடைந்தனர். இது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களிலும் பரவி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









