எரிபொருள் விலை உயர்வு: உள்நாட்டு மற்றும் சர்வதேச தபால் கட்டணங்களை உயர்த்தியது போஸ் மலேசியா

20 மார்ச் 2026, 7:38 AM
எரிபொருள் விலை உயர்வு: உள்நாட்டு மற்றும் சர்வதேச தபால் கட்டணங்களை உயர்த்தியது போஸ் மலேசியா

கோலாலம்பூர், மார்ச் 20 – உலகளாவிய ரீதியில் எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, மலேசியாவின் தேசிய தபால் சேவை நிறுவனமான போஸ் மலேசியா (Pos Malaysia), உள்நாட்டு மற்றும் சர்வதேச தபால் சேவைகளுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை (Fuel Surcharge) அமல்படுத்தியுள்ளது.

இந்தக் கட்டண உயர்வு கடந்த மார்ச் 18-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, அனைத்து சர்வதேச தபால் மற்றும் பார்சல் விநியோகங்களுக்கும் (International Shipments) 40 சதவீத எரிபொருள் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுச் சேவைகளைப் பொறுத்தவரை, ஏற்கனவே நடைமுறையில் உள்ள எரிபொருள் கூடுதல் கட்டணத்துடன் கூடுதலாக 15 சதவீதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு ஏற்ப, இந்த விநியோகக் கட்டண விகிதங்கள் எதிர்வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மறுஆய்வு செய்யப்பட்டு உடனுக்குடன் புதுப்பிக்கப்படும் என்று போஸ் மலேசியா விளக்கியுள்ளது.

எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களைச் சமாளிக்கவும், தடையற்ற விநியோகச் சேவையை உறுதி செய்யவும் இந்த இக்கட்டான முடிவை எடுத்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது தபால் மற்றும் பார்சல் சேவைகளுக்கான செலவினங்களைத் திட்டமிடும்போது இந்த மாற்றங்களைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.