ஷா ஆலம், மார்ச் 20 – மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற சூழலைக் கருத்தில் கொண்டு, சிலாங்கூர் மாநில உணவு சேமிப்புக் கிடங்கில் (GMS) உள்ள உணவு இருப்பை ஆறு மாதங்களுக்குத் தேவையான அளவிற்கு உயர்த்த மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நேற்றுஷா ஆலமில் நடைபெற்ற 'சிங்கா ஷவ்வால்' (Singgah Syawal) நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, செய்தியாளர்களைச் சந்தித்த மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இத்தகவலை வெளியிட்டார்.
முன்னதாக, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த இலக்கை அடைய இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தற்போதைய உலகளாவிய விநியோகச் சங்கிலித் தடங்கல்களால் மக்களின் உணவுத் தேவை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, இந்தத் திட்டம் இப்போது முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
"தற்போது எங்களிடம் மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவு இருப்பு உள்ளது. இது மத்திய அரசின் திட்டங்களுக்கு அப்பாற்பட்ட மாநில அரசின் தனிப்பட்ட முயற்சியாகும்.
உதாரணமாக, மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அரிசி இருப்பைப் பராமரிக்கிறது, அது சிலாங்கூர் மாநில அரசின் இந்த முயற்சிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும். மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக, நாங்கள் எங்களது சேமிப்பு நடவடிக்கைகளை தற்போது விரைவுபடுத்தியுள்ளோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதை மந்திரி புசார் சுட்டிக்காட்டினார்.
இது எரிபொருள் விலையை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தப் போக்குவரத்துத் துறையையும் பாதித்து, உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.
இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும், சிலாங்கூர் மாநிலம் நிலையான மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வலிமை கொண்ட மாநிலமாகத் திகழ்வதை உறுதி செய்யத் தமது நிர்வாகம் உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக, உலகளாவிய விநியோகச் சங்கிலித் தடங்கல்களை எதிர்கொள்ளும் வகையில், மூன்று மாதங்களுக்குத் தேவையான கூடுதல் உணவு இருப்பைச் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (PKPS) தயார் செய்யும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தனது பயணத்தின் ஒரு பகுதியாக, மந்திரி புசார் அவர்கள் கோத்தா அங்கெரிக் தீயணைப்பு நிலையம், சுங்கை பூலோ சிறைச்சாலை மற்றும் கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை ஆகிய இடங்களுக்கும் நேரில் சென்று அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.








