சொகுசு கார் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 12 நபர்கள் பிடிபட்டனர்

19 மார்ச் 2026, 3:06 AM
சொகுசு கார் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 12 நபர்கள் பிடிபட்டனர்

கோலாலம்பூர், மார்ச் 18: பல மாநிலங்களில் தீவிரமாக இயங்கி வந்த ஆடம்பர வாகனங்களை குளோன் செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 12 பேரை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (JSJ) கைது செய்துள்ளது. கடந்த வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் இவர்கள் பிடிபட்டனர்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ எம். குமார், 'ஓப்ஸ் லேஜாங் மேவா குளோன்' என்ற இந்த நடவடிக்கை, ஐந்து மாத கால உளவுத் தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார். கெடா, கிளந்தான், ஜொகூர், நெகிரி செம்பிலான், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் ஆகிய ஆறு மாநில காவல்துறையின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

“கைது செய்யப்பட்டவர்கள் 30 முதல் 60 வயதுக்குட்பட்ட 10 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் ஆவர். அவர்களில் கார் திருட்டுக்காக சிங்கப்பூர் அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த ஒருவரும் அடங்குவார்.”

“அந்த சந்தேக நபர் கடந்த மார்ச் 16 ஆம் தேதி சிங்கப்பூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்,” என்று அவர் இன்று இங்கு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மற்றவர்களில் வாங்குபவர்கள், பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்கும் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் அடங்குவர் என்றும், அவர்கள் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நடவடிக்கையின் போது, சுமார் 1.1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு ரகங்களைச் சேர்ந்த 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக குமார் தெரிவித்தார். அவற்றில் எட்டு வாகனங்கள் குளோன் செய்யப்பட்டவை என்றும், மற்ற நான்கு சிங்கப்பூரிலிருந்து திருடப்பட்டவை என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த குளோன் வாகனங்களின் சேசிஸ் மற்றும் எஞ்சின் எண்கள் மற்ற வாகனங்களின் அடையாளங்களுடன் பொருந்துமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்றும், அவற்றுக்கு செல்லுபடியாகும் வாகன உரிமைச் சான்றிதழ் மற்றும் சாலை வரியும் இருந்துள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

‘முழுமையான இழப்பு’ அல்லது ‘பொருளாதார ரீதியில் பழுதுபார்க்க முடியாத’ நிலையில் உள்ள வாகனங்களின் அடையாளங்களை இந்தக் கும்பல் பயன்படுத்தி, பதிவுத் தரவுகளைக் கையாண்டு புதிய அடையாளங்களை உருவாக்கியதாக நம்பப்படுகிறது.

“சந்தை விலையை விட 50 முதல் 60 விழுக்காடு குறைந்த விலையில் இந்த வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. வாங்குபவர்களைக் கவரும் நோக்கில் இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் இவை வெளிப்படையாக விளம்பரம் செய்யப்படவில்லை," என்றார் அவர்.

எனவே, சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் வழங்கப்படும் ஆடம்பர வாகனங்களை வாங்குவதற்கு முன், பொதுமக்கள் முழுமையான பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

மோட்டார் வாகனம் திருடியதற்காக குற்றவியல் சட்டத்தின் 379A பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தக் கும்பலின் சூத்திரதாரி மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.