மூன்றில் ஒரு பங்கு பொதுப் பணித்துறைத் திட்டங்கள் கால அட்டவணைக்கு முன்னதாகவே முன்னேற்றம் - அஹ்மத் மஸ்லான்

18 மார்ச் 2026, 6:39 AM
மூன்றில் ஒரு பங்கு பொதுப் பணித்துறைத் திட்டங்கள் கால அட்டவணைக்கு முன்னதாகவே முன்னேற்றம் - அஹ்மத் மஸ்லான்

கூச்சிங், மார்ச் 18 -- பொதுப்பணித் துறையின் (JKR) ஒட்டுமொத்தத் திட்டங்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு, நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணையை விட முன்னதாகவே முன்னேற்றம் கண்டுள்ளதாக பொதுப்பணித் துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ அஹ்மத் மஸ்லான் கூறினார்.

நாடு தழுவிய நிலையில் செயல்படுத்தப்படும் 855 திட்டங்களில், மூன்றில் ஒரு பங்கு திட்டங்கள் கால அட்டவணைக்கு முன்னதாகவும் அல்லது சரியான நேரத்திலும் உள்ளன; மீதமுள்ளவை தாமதமான திட்டங்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளன என்றார் அவர்.

ஒரு திட்டம் 30 நாட்களுக்கு மேல் தாமதமானால் அல்லது அசல் அட்டவணையை விட 10 விழுக் காட்டிற்கும் மேல் பின் தங்கினால் அது தாமதமான திட்டம் எனக் கருதப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

"எனவே, தாமதமாகச் செல்லும் திட்டங்களை விரைவுபடுத்துமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். தாமதமான திட்டங்களை முன்கூட்டியே முடிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

இன்று இங்கு, கூச்சிங்கில் உள்ள கூட்டரசு ஒருங்கிணைந்த கட்டிட வளாகத்தின் (BGP) கட்டுமானத் தளத்தைப் பார்வையிட்ட பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கிடையில், இத்திட்டத்தின் சீரான செயல் பாட்டை உறுதி செய்வதற்காக, பொதுப் பணித்துறை அமைச்சும் மாநில அதிகாரிகளும் இணைந்து BGP திட்டத்தைக் கண்காணிப்பதாக அவர் கூறினார்.

கூச்சிங் BGP திட்டம் தற்போது 134 நாட்கள் முன்னதாகச் செல்வதாகவும், இது நெருக்கமான கண்காணிப்பு மற்றும் நவீன கட்டுமான முறைகளின் செயல் திறனைப் பிரதிபலிக்கிறது என்றும் அஹ்மத் தெரிவித்தார்.

"இந்தத் திட்டம் தொடர்ந்து கால அட்டவணைக்கு முன்னதாகவே செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம். இதன் மூலம், இதை முன்கூட்டியே முடிக்க முடியும்," என்று 140.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இத்திட்டம் குறித்து அவர் கூறினார். இத்திட்டம் நவம்பர் 2028-இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கூச்சிங்கைச் சுற்றி தனித்தனியாக இயங்கி வரும் 25 கூட்டரசு அரசாங்க நிறுவனங்கள் இந்த ஒருங்கிணைந்த கட்டிடத்தில் செயல்படும் என்றார் அவர்.

"பொதுமக்கள் கூட்டரசு அரசாங்க அலுவலகங்களுடன் எளிதாகத் தொடர்பு கொள்ள ஒரே இடத்தில் ஒரு மையம் தேவைப் படுகிறது. இதனால் அவர்கள் வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை," என்று அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.