ஷா ஆலம், மார்ச் 16 - பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு நகைக்கடையில் இன்று காலை நடந்த கொள்ளை முயற்சியில், பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் கொள்ளையன் உயிரிழந்தான். இன்று காலை சுமார் 11 மணியளவில், கடை திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த மர்ம நபர் கூர்மையான ஆயுதம் ஒன்றை ஏந்தியபடி மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளார். அந்தச் சமயத்தில் கடையில் வாடிக்கையாளர்கள் எவரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு அந்நபர் உள்ளே நுழைந்துள்ளார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பாதுகாப்பு அதிகாரியுடன் அந்த நபர் கைகலப்பில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
தன்னுடன் பணியாற்றும் சக பாதுகாப்பு அதிகாரி காயமடைந்ததைக் கண்ட மற்றொரு பாதுகாப்பு அதிகாரி, நிலைமையைக் கட்டுப்படுத்த அந்த நபர் மீது இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில் பலத்த காயமடைந்த அந்தச் சந்தேக நபர், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இந்தத் துணிகரச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக நகைக்கடையிலிருந்து எந்தப் பொருட்களும் திருடப்படவில்லை என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த (IPD) அதிகாரிகள் சம்பவ இடத்தில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை காவல்துறை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








