மத்திய கிழக்கு பதற்றம்: பொருளாதார ஊக்கத் திட்டம் இல்லை - நிதி அமைச்சு அறிவிப்பு

16 மார்ச் 2026, 6:59 AM
மத்திய கிழக்கு பதற்றம்: பொருளாதார ஊக்கத் திட்டம் இல்லை - நிதி அமைச்சு அறிவிப்பு

கோலாலம்பூர், மார்ச் 16 - மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, தற்போதைய நிலையில் மலேசியாவிற்குப் புதிய பொருளாதார ஊக்கத் திட்டம் (Economic Stimulus Package) எதனையும் அறிமுகப்படுத்தும் எண்ணம் அரசிடம் இல்லை என்று இரண்டாம் நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய இணை முதலீட்டு நிதி (MyCIF) கலந்துரையாடல் நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையைப் பேணுவதற்கான குறுகிய கால நடவடிக்கைகளில் மட்டுமே அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு நெருக்கடி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், ஒருவேளை இந்தப் பதற்றம் தணிந்தால் அத்தகைய ஊக்கத் திட்டங்களுக்கான அவசியம் இருக்காது என்றும் அவர் விளக்கமளித்தார். எவ்வாறாயினும், உலகளாவிய இந்தச் சூழல் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்குமா என்பதை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அமீர் ஹம்சா உறுதி அளித்தார்.

முன்னதாகப், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் எரிபொருள் இருப்பு குறித்துப் பேசுகையில், மலேசியாவின் பெட்ரோலியப் பொருட்கள் எதிர்வரும் மே மாதம் வரை போதுமான அளவில் இருப்பதை பெட்ரோனாஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதனை வழிமொழிந்த அமீர் ஹம்சா, குறிப்பாகப் பண்டிகைக் காலங்களில் மக்கள் பயணங்களை மேற்கொள்ளும் போது எரிபொருளுக்கான தேவை அதிகரிப்பதை அரசு உணர்ந்துள்ளதாகக் கூறினார். இதற்காக எண்ணெய் நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தேவையுள்ள இடங்களில் கூடுதல் கையிருப்புத் தொட்டிகளை அமைத்து தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் மானியம் குறித்துப் பேசிய அமைச்சர், தற்போது அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் மானியத்திற்காக மாதந்தோறும் 3.2 பில்லியன் ரிங்கிட்டைச் செலவிட்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார். இதில் பெட்ரோல் மானியம் 2 பில்லியன் ரிங்கிட்டாகவும், டீசல் மானியம் 1.2 பில்லியன் ரிங்கிட்டாகவும் உயர்ந்துள்ளது.

உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் மலேசியாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகையும் பாதித்துள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் எரிசக்தி பயன்பாட்டில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கக் கூட்டணிக்கு இடையே வெடித்த மோதல் காரணமாக, உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகத்தைக் கையாளும் 'ஹார்முஸ்' நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சவாலான சூழலிலும், நாட்டின் நடுத்தர மற்றும் நீண்ட காலப் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு முகமைகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக நிதி அமைச்சர் அமீர் ஹம்சா அசிசான் தனது உரையில் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.