ஷா ஆலாம் மார்ச் : 15 ஆண்டுகளாக சம்பளம் வழங்காமல் இரண்டு இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்களைக் கட்டாய வேலைச் சுரண்டல் செய்ததாக 73 வயது பெண் மற்றும் அவரது மகனுக்கு எதிராக கிள்ளான் ஆட்கடத்தல் தடுப்பு அமர்வு நீதிமன்றத்தில் (ATIP) குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கடந்த மார்ச் 9-ஆம் தேதி, ஆட்கடத்தல் மற்றும் புலம் பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் 2007-இன் (சட்டம் 670) பிரிவு 12-இன் கீழ், தண்டனைச் சட்டத்தின் 34-வது பிரிவுடன் சேர்த்து குற்றம் சாட்டப் பட்டதாக மலேசிய குடிநுழைவுத் துறை (JIM) தெரிவித்தது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த தம்பதியினர் வீட்டுப் பணிப் பெண்களாகச் சுரண்டப் பட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
"குற்றம் சாட்டப்பட்டவர்களின் மேற்பார்வையின் கீழ் 15 ஆண்டுகள் பணிபுரிந்த காலத்தில், அந்தத் தம்பதியினருக்குச் சம்பளம் வழங்கப் படவில்லை என்று சந்தேகிக்கப் படுகிறது. இந்த நடவடிக்கை கட்டாய வேலைச் சுரண்டலின் கூறுகளைக் கொண்டுள்ளது," என்று அந்த அறிக்கை கூறியது.
இருப்பினும், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட பிறகு, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் வழக்கறிஞர் பிரதிநிதித்தார்.
குடிநுழைவுத் துறை தரப்பு, குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் RM20,000 ஜாமீன் கோரியது, ஆனால் ஒரு ஜாமீன்தாரருடன் தலா RM15,000 ஜாமீனில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்காக ஏப்ரல் 13-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், இருவருக்கும் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
ஆட்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தலின் எந்தவொரு வடிவத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை குடிநுழைவுத் துறை வலியுறுத்தியது.
"ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் 2007 [சட்டம் 670]-இன் கீழ் குற்றம் புரியும் எந்தவொரு தனிநபர், கும்பல், முதலாளி அல்லது எந்தத் தரப்பினருக்கும் எதிராக சமரசமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அது கூறியது.
அதே நேரத்தில், நாட்டின் இறையாண்மையும் பாதுகாப்பும் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய, சந்தேகத்திற்கிடமான எந்த ஒரு நடவடிக்கையையும் புகாரளிக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள்.
எந்தவொரு தகவலையும் 03-8880 1471 என்ற எண்ணிலோ அல்லது urusetia_p@imi.gov.my என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம்.
சம்பளம் வழங்காமல் இரண்டு இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்கள் 15 ஆண்டுகள் கட்டாய வேலைச் சுரண்டல் - குற்றம் சாட்டப் பட்டுள்ளது
14 மார்ச் 2026, 4:54 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
ராக்கி வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவம்: ஆடவர் மீது வியாழக்கிழமை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

national
கிள்ளான் ஆற்றில் இந்தோனேசியப் பெண்ணின் சடலம் மீட்பு; போலீஸ் விசாரணை
Shalini Rajamogun
5 ஆகஸ்ட் 2026

national
தவறுதலாக ஆக்ஸிலேட்டரை மிதித்ததால் பலகாரக் கடையில் கார் மோதி விபத்து
Shalini Rajamogun
5 ஆகஸ்ட் 2026

selangor
பெட்டாலிங், கிள்ளான் மாவட்டங்களில் டிங்கி பாதிப்புகள் தொடர்ந்து உயர்வு
Adam Azman
4 ஆகஸ்ட் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



