புக்கிட் காயூ ஹிதாம் AKPS தளபதி மீதான துப்பாக்கிச்சூடு: 10 சந்தேக நபர்கள் கைது

12 மார்ச் 2026, 7:08 AM
புக்கிட் காயூ ஹிதாம் AKPS தளபதி மீதான துப்பாக்கிச்சூடு: 10 சந்தேக நபர்கள் கைது

அலோர் ஸ்டார், மார்ச் 12: புக்கிட் காயூ ஹிதாம் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் (AKPS) தளபதி ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது கடந்த வாரம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு உதவ 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் தாய்லாந்துப் பெண் ஒருவரும் அடங்குவார் என்றும், இவர்கள் அனைவரும் 'பாக் சு' கும்பலுடன் தொடர்புடையவர்கள் என நம்பப் படுவதாகவும் கெடா மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார். பிப்ரவரி 25 முதல் 28-ஆம் தேதி வரை குபாங் பாசு மாவட்டத்தின் பல பகுதிகளில் இவர்கள் கைது செய்யப் பட்டதாக அவர் கூறினார்.

சனிக்கிழமை அன்று, கெடா குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJ) சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் (D9), புக்கிட் அமான் D9 பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட மூன்று தொடர் சோதனைகளின் விளைவாக இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

"புக்கிட் அமான் D9 பிரிவினருடன் இணைந்து கெடா JSJ D9 பிரிவு மேற்கொண்ட மூன்று தொடர் சோதனைகளில், 44 முதல் 58 வயதுடைய மேலும் மூன்று உள்ளூர் ஆடவர்கள் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டனர்."

"ஆரம்ப கட்ட சிறுநீர் பரிசோதனையில், சந்தேக நபர்களில் ஒருவரின் உடலில் மெத்தம்பெட்டமைன் இருந்தது உறுதியானது. மேலும், அவர்களிடமிருந்து மூன்று கைபேசிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மேற்கொண்டு நடத்தப்பட்ட சோதனையில், சந்தேக நபர்களில் இருவருக்குக் கடந்த கால குற்றப்பதிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தின் முதல் 24 மணி நேரத்தில் ஏழு பேர் கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 10 ஆக உயர்ந்துள்ளது.

SAC முகமது நசருதீன் எம் நாசிரை சுட முயன்ற மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேக நபர்கள் பயன்படுத்திய ஆயுதத்தைக் கண்டுபிடிப்பது உட்பட, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

பிப்ரவரி 25-ஆம் தேதி அதிகாலை 5.40 மணியளவில், மலேசியா-தாய்லாந்து எல்லையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள புக்கிட் காயூ ஹிதாமில் உள்ள அல் முஹாஜிரின் மசூதிக்குச் செல்லும் வழியில், முகமது நசருதீன் ஓட்டிச் சென்ற புரோட்டோன் X70 ரக கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள், பகுதி-தானியங்கி துப்பாக்கியைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரின் வாகனத்தை நோக்கி இரண்டு முறை சுட்டதாக நம்பப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.