ஷா ஆலம், மார்ச் 10 – சிலாங்கூர் மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில், கஜகஸ்தான் நாட்டின் கட்டுமானத் துறை மற்றும் 'பைடெரெக்' தேசிய மேலாண்மை நிறுவனத்தின் பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் இன்று சிலாங்கூருக்கு வருகை தந்துள்ளனர்.
இரு தரப்பிற்கும் இடையிலான உத்திபூர்வ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த அதிகாரப்பூர்வ வேலைத்திட்டச் சந்திப்பு நடத்தப்பட்டது.
சிலாங்கூர் மந்திரி புசார் கார்ப்பரேஷன் (எம்பிஐ) மற்றும் கஜகஸ்தான் நாட்டின் மூலோபாய கூட்டாளர்கள் இடையே குறிப்பாக நீர் மேலாண்மை மற்றும் கழிவு மேலாண்மை துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் மாநில முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.
தொழில்நுட்பப் பகிர்வு மற்றும் நிபுணத்துவப் பரிமாற்றங்கள் மூலம், நகர்ப்புற உள்கட்டமைப்பை மிகவும் திறமையாகவும், நிலையான முறையிலும் மேம்படுத்த இந்த ஒத்துழைப்பு உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இந்தச் சந்திப்பானது சர்வதேச அளவில் சிலாங்கூர் மாநிலத்தின் உறவை விரிவுபடுத்துவதோடு, நவீன கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்துறைத் திறனை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியக் களமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, சிலாங்கூர் மாநிலக் குழுவினர் கஜகஸ்தான் நாட்டிற்கு மேற்கொண்ட பயணத்தின் தொடர்ச்சியாகவே இந்தத் தூதுக்குழுவினரின் வருகை அமைந்துள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலப் பொருளாதார மதிப்பையும், சமூக மேம்பாட்டையும் உருவாக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.








