ஜோகூர், மார்ச் 9 — கம்போங் செபாகாட் பாரு, ஸ்கூடாயில் விரைவுப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர் என தகவல் வெளியிடப்பட்டது.
நேற்று இரவு சுமார் 8 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில், ஓட்டுநர் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இதில் இருவர் பேருந்தின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்து குறித்து இரவு 8.20 மணியளவில் தகவல் கிடைத்ததாக ஜோகூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் நடவடிக்கை பிரிவு தெரிவித்தது.
தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் பேருந்து ஓட்டுநர் உட்பட இடிபாடுகளில் சிக்கியிருந்த அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.








